எம்பி., எம்எல்ஏ, மாஜிக்கள் “எல்லாம்” வரணும்.. “படைதிரட்டும்” பழனிசாமி! ஒரே விழாக்கோலம் - என்னாச்சு?
சென்னை: அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவடைந்து 51வது ஆண்டு தொடங்குவதை அடுத்து வரும் 17 ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெறும் விழாவிற்கு வரவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அழைத்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர், 'பாரத் ரத்னா' புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" பொன்விழா ஆண்டை நிறைவு செய்து, 17.10.2022 - திங்கட்கிழமை 51-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இதனை கொண்டாடும் வகையில் அன்று காலை 9 மணியளவில் சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, கட்சி கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் அதேபோல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதே போல், அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் 51-ஆவது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட கிளை, வார்டு, வட்ட அளவில் ஆங்காங்கே கம்பீரமாக வீற்றிருக்கும் கழக கொடிக் கம்பங்களுக்கு புதுவர்ணம் பூசியும், கொடிக் கம்பங்கள் இல்லாத இடங்களில் புதிய கொடிக் கம்பங்களை அமைத்து கழகக் கொடியினை ஏற்றி வைத்தும், நம் இருபெரும் தெய்வங்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது திருஉருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கியும்; ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்வதோடு, கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, கழக பொன்விழா ஆண்டை விழாக் கோலத்துடன் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கழக இடைக்காலப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது." என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications