எங்க ஏரியாவில் ஆட்டமா? உங்க ஏரியாவில் என்ன நடக்குதுனு பாருங்க! அட்டாக்கை ஆரம்பித்த எடப்பாடி & கோ..!
சென்னை : கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமி அதிருப்தி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து பதவிகளை அளிக்க ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டு வரும் நிலையில், தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்-க்கு எதிரானவர்களை வைத்து மீண்டும் பிரம்மாண்டமான ஒரு போராட்டத்தை நடத்த எடப்பாடி தரப்பு திட்டமிட்டு அதற்கான ஆயத்த வேலைகளை இறங்கி உள்ளது.
Recommended Video
அதிமுகவில் சாதுரியமாக காய் நகர்த்திய எடப்பாடி பழனிச்சாமி மூன்று முறை முதல்வராக பதவி வகித்த ஓபிஎஸ்சை ஓரம் கட்டி கட்சியின் தலைமை பொறுப்பை 99.9% நிர்வாகிகளின் பேராதரோடு கைப்பற்றியுள்ளார்.
மிகவும் அமைதியானவராகவே அடையாளம் காணப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தன்னை கட்சியிலிருந்து நீக்கும் அளவுக்கு அதிரடி காட்டுவார் என எதிர்பாக்காத ஓபிஎஸ் தரப்பு தற்போது கட்சியில் தங்கள் இருப்பை உறுதி செய்து கொள்வதற்காக பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது.
ஓபிஎஸ் டீமுக்கு தாவும் பொதுக்குழு உறுப்பினர்கள்! டெல்டாவில் கிடைத்த 'பச்சை சிக்னல்’! அதிரடி எண்ட்ரி?
எடப்பாடி பழனிச்சாமி
தேர்தல் ஆணையத்தில் முறையீடு, நீதிமன்ற வழக்கு என அடுத்தடுத்து பல்வேறு சட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வந்தாலும் அவ்வப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில் நிர்வாகிகள் நீக்கம் புதிய நிர்வாகிகள் நியமனம் என அதிரடி காட்டி வருகிறார் ஓபிஎஸ். ஆனால் இதனை பெரிய அளவில் எடப்பாடி பழனிச்சாமி நெருக்கடியாகவே எடுத்துக் கொள்ளவில்லை என தெரிய வருகிறது.
கொங்கு பிளான்
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமைக்கு எதிராக அதிமுகவில் உள்ள நிர்வாகிகளை கண்டறிந்து அவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஓபிஎஸ் தரப்பு ஈடுபட்டிருக்கிறது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் நிர்வாகிகளை ஒன்றாக இணைத்து தேனியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக ஆர்.பி.உதயகுமாrரை வைத்து எடப்பாடி பழனிச்சாமி ஆர்ப்பாட்டம் நடத்தியது போல சேலத்தில் எடப்பாடி எதிர்ப்பு நிர்வாகிகளை வைத்து பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மாஸ் காட்ட திட்டம்
இதற்கான வேலைகள் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்த தகவல்கள் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு சென்றிருக்கிறது. இதனால் கடும் அதிர்ச்சியில் இருந்ததன் வெளிப்பாடு எடப்பாடி பழனிச்சாமியின் பழனி பயணம் என்கின்ற விவரம் அறிந்த ரத்தத்தின் ரத்தங்கள். பழனி சென்றபோது அதிக கூட்டத்தை அழைத்து வரவேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் அதனை கனகச்சிதமாக செய்து முடித்தனர் அதிமுகவில் மூத்த நிர்வாகிகளான நத்த விஸ்வநாதன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன்.
மாபெரும் ஆர்ப்பாட்டம்
இருவரும் சேர்ந்து சுமார் 5,000 மேற்பட்டவர்களை பழனியில் குவித்து மாநாடு போல பிரம்மாண்டம் காட்டினர். மேலும் எடப்பாடி பழனிச்சாமி செல்லும் வழியெல்லாம் பிரம்மாண்ட பேனர்கள் தோரணங்கள் அதிமுக கொடிகள் என மாஸ் காட்டினர. இதனால் தென் மண்டலத்தில் தனக்கு செல்வாக்கு இருப்பதை உறுதி செய்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது கொங்கு டெல்டா மாவட்டங்களில் ஓபிஎஸ்-ன் ஆதிக்கம் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் மீண்டும் தென் மாவட்டங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டு இருக்கிறது.
தொண்டர்கள் குழப்பம்
அதில் தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகளை ஒன்றாக திரட்டி ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுக்கும் வகையில் மீண்டும் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெறும் விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் களம் சூடு பிடித்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு எதிராக ஓ பன்னீர்செல்வத்தில் சொந்த மாவட்டமான தேனியில் மிகப்பெரிய அளவில் கூட்டத்தைக் கூட்டி மாஸ் காட்டினார் ஆர்பி உதயகுமார். அவரது சொந்த ஊரில் நின்று கொண்டு வீட்டை சூறையாடுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? ஓ பன்னீர்செல்வம் ஒரு துரோகி! என அதிரடி காட்டினார் ஆர்பி உதயகுமார். இதனால் ஓபிஎஸ் தரப்பு அதிருப்தியில் இருந்த நிலையில் தான் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மதுரை விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு ஓபிஎஸ்க்கு அளிக்கப்பட்டது. இப்படி இரு தரப்பினரும் மாறி மாறி பிரம்மாண்டமாக நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நிலையில் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் அதிமுக தொண்டர்கள்.