பங்குனியில் பொங்கல் வைத்த சூரியன் - ஈரோடு110,காஞ்சி,சேலம்,கரூரில்109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு
பங்குனி மாதத்திலேயே சூரியன் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் 15 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 110 டிகிரி பதிவாகியுள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் அனல் காற்று வீசத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஈரோடு நகரத்தில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வெயிலின் தாக்கம் புழுக்கம் தாங்காமல் மக்கள் பரிதவித்து போயுள்ளனர். இன்னும் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை மையம் கணித்துள்ளது.
தை மாதத்தில் மக்கள் சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவார்கள். அதற்கு கிண்டலாக பலரும் தையில் சூரியனுக்கு நாம பொங்க வைக்கிறதும், சித்திரையில் சூரியன் நமக்கு பொங்கல் வைக்கிறதும் சகஜம்தானேப்பா என்று சொல்லுவார்கள். இந்த ஆண்டு பங்குனியிலேயே வெயில் பட்டையை கிளப்புகிறது. பல மாவட்டங்களில் வெயில் வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டது.
பிரான்ஸில் இருந்து எண்ட் டூ எண்ட் பயணம்.. மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இன்று இரவு இந்தியா வருகை!
கோடை மழை வெயிலுக்கு இதமாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வெப்பநிலை 9 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
21 மாவட்டங்களில் வெப்பம் உயரும்
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை கடலோர மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களான காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 21 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை உயரக் கூடும். அதிகபட்சவெப்பநிலையானது வழக்கத்தைவிட 5 முதல் 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக் கூடும். அதேபோல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.
12 மணி முதல் 4 மணி வரை
இதன் காரணமாக ஒருசில இடங்களில் அனல்காற்று வீசும். பொதுமக்கள், விவசாயிகள், வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் பகல் 12 மணிமுதல் மாலை 4 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வது, ஊர்வலம் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம், சேலம், கரூர் பரமத்தி ஆகிய இடங்களில் தலா 109, வேலூர், திருத்தணியில் 106,திருச்சி, மதுரை விமான நிலையம், திருப்பூர், தருமபுரி ஆகிய இடங்களில் தலா 105, நாமக்கல், அரியலூர் ஆகிய இடங்களில் தலா 104,சென்னை விமான நிலையத்தில் 103, கடலூரில் 101, கோவையில் 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
சூறாவளி வீசும்
மத்திய அந்தமான் கடல் பகுதியில் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தப் பகுதியாக வலுப்பெற உள்ளது. இதனால் அப்பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
மன்னார் வளைகுடா பகுதி
இன்றும் நாளையும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.