28 தமிழக சுங்க சாவடிகளில் இன்று முதல் 15% கட்டணம் உயர்வு- அத்தியாவசிய பொருட்கள் விலை மேலும் உயர்வு!
சென்னை: தமிழகத்தில் 28 சுங்க சாவடிகளில் இன்று முதல் 15% கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது நடைமுறைக்கு வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
நாட்டில் மொத்தம் 800க்கும் அதிகமான சுங்க சாவடிகள் இயங்கி வருகின்றன. இதில் 600க்கும் மேற்பட்டவைகளில் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 48 சுங்க் சாவடிகள் உள்ளன. இந்த சுங்க சாவடிகளில் வசூலிக்கும் கட்டணம் பகல் கொள்ளை என்பது பொதுமக்கள் குற்றச்சாட்டு. சுங்கச் சாவடிகளை தமிழகத்தில் அகற்ற வேண்டும் என்பது பொதுமக்கள், அரசியல் கட்சிகள் கோரிக்கை.
சுங்க சாவடிகளுக்கு எதிராக தமிழகத்தில் பல கட்டப் போராட்டங்கள் நடந்துள்ளன. தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர் கட்சியினர் இந்த சுங்க சாவடி கட்டணங்களை எதிர்த்து அவற்றை தாக்கியும் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதை பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் அல்லது அதற்காக செய்யப்பட்ட முதலீடு திரும்ப எடுக்கப்படும் வரை மட்டுமே முழுமையான சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்; அதன்பின்னர் பராமரிப்புக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்பதுதான் விதி. ஆனால், தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பெரும்பாலானவை அமைக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. அதேபோல் பெரும்பாலான சாலைகளுக்கு செய்யப்பட்ட முதலீடு எடுக்கப்பட்டு விட்டது. அத்தகைய சாலைகளில் பராமரிப்புக்காக 40% கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், எந்தக் காரணத்தையும் கூறாமலேயே அனைத்து சாலைகளிலும் முழுமையான சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவது எந்தவகையில் நியாயம்? எனவும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் 28 சுங்க சாவடிகளில் மேலும் 15% கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இந்த 15% கூடுதல் கட்டண உயர்வு, 28 சுங்க சாவடிகளில் இன்று முதல் அமலுக்கு வந்தது. தருமபுரி, திருச்சி சமயபுரம், கரூர் , உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, ஓமலூர் என 28 சுங்க சாவடிகளில் ரூ5 முதல் ரூ150 வரை கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இக்கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்கள் விலை மேலும் கிடுகிடுவென அதிகரிக்க உள்ளது. இது பொதுமக்களை மிகக் கடுமையாக பாதிக்கும்.