காய்கறி மாலை.. டிங்குடி டிங்காலே பாடல்.. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் செம போராட்டம்
சென்னை: சென்னையில் திமுக அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கழுத்தில் காய்கறி , மளிகைப் பொருட்களின் மாலையுடன் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், போராட்டத்தின் போது, 'டிங்குடி டிங்காலே ..ஸ்டாலின் ஆட்சி டிங்குடி டிங்காலே ' என பாடலோடு முழக்கங்களை எழுப்பினார்.
Recommended Video
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் , திமுக தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டியும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கலந்து கொண்டார்.
விலைவாசி உயர்வைக் குறிப்பிடும் வகையில் கழுத்தில் காய்கறி , மளிகைப் பொருட்களின் மாலைகளை அணிந்தும் , பாடல் பாடியும் முழக்கங்களை எழுப்பியதோடி, காமெடியாக பேசி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

கழுத்தில் காய்கறி, மளிகை பொருள் மாலை
தமிழகத்தில் காய்கறி , மளிகைப் பொருட்களின் விலை உயர்வை சுட்டிக்காட்டும் விதமாக கடுகு , சீரகம் , உளுந்தம் பருப்பு , கொண்டைக் கடலை , பொட்டுக் கடலை , வெந்தயம் , உப்பு , மிளகாய் , சேமியா பாக்கெட்டுகள் கோர்க்கப்பட்ட மாலை ஒன்றையும் , வெங்காயம், தக்காளி , வெண்டைக்காய் , கோவைக்காய் , பச்சை மிளகாய் கோர்க்கப்பட்ட மற்றுமொரு மாலையையும் கழுத்தில் அணிந்துகொண்டு ஜெயகுமார் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் பாடல்
மேலும் திமுக ஆட்சி மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், "டிங்குடி டிங்காலே... ஸ்டாலின் ஆட்சி டிங்குடி டிங்காலே ..தலையில் துண்டு போட்டுகனு ங்கமே தில்லாலே..." என பாடல் பாடியதுடன் , வெறும் 2 மணி நேரத்தில் இப்பாடலை தான் எழுதியதாக கூறியதை தொடர்ந்து அங்கு நின்ற நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் அண்ணன் DJ வாழ்க என உற்சாகக் குரல் எழுப்பினர் .

முன்னாள் அமைச்சர் பேட்டி
ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வதாக திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தனர், ஆனால் திமுக ஆட்சியில் நீட் காரணமாக 5 மாணவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளார்கள் எனவும் , தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாவும், அராஜகம் , அடாவடி செய்து கடைகளில் மாமூல் வசூலிக்கிறார்கள் என குற்றம்சாட்டினார். மேலும் கோவையில் 10 ம் வகுப்பு மாணவி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தையே உலுக்கியுள்ளது எனவும், தமிழக அரசு மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை தரவில்லை எனக் கூறினார்.

தமிழகத்தில் மழை சேதம்
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மழை நின்ற பிறகும் பல இடங்களில் இன்னும் தண்ணீர் வடியவில்லை , முறையான நடவடிக்கை மேற்கொள்ளாததால் ஸ்டாலின் தொகுதியிலேயே தண்ணீர் இடுப்பளவு தேங்கியது எனக் கூறிய ஜெயக்குமார், பொய் வழக்கு மூலம் அதிமுக வை அழிக்க நினைப்பது பகல் கனவு எனவும், கருணாநிதி காலத்திலும் இதுபோல்தான் செய்தார்கள் எனவும், எதிர்க்கட்சிகள் இருக்க கூடாது என கருத்துரிமையை புறக்கணிக்கிறது திமுக அரசு என்றும், திமுகவிற்கு ஒத்தூதினால்தான் கருத்து சுதந்திரம் எனவும், திமுகவை எதிர்ப்பவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்படுகிறது என்றார்.

நடப்பது குடும்ப ஆட்சி
நடப்பது குடும்ப ஆட்சி , ஸ்டாலின் முதல்வராக இருந்தாலும் , நிழல் முதல்வர் உதயநிதி மற்றும் சபரீசன்தான் என்பது ஊரறிந்த உண்மை எனக் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உதயநிதி அமைச்சர் ஆக வேண்டும் என திமுகவில் சிலர் கூறுகின்றனர், எதுவும் நடக்கலாம் ஆனால் உதயநிதி அமைச்சரானாலும் தமிழகத்திற்கு நல்லது நடக்காது என்றும், நான் மட்டும் தனியாக இங்கு ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை, கட்சியின் அமைப்புப்படி பல மாவட்ட செயலாளர்கள் இதுபோல ஆங்காங்கு ஆர்ப்பாட்டம் செய்து வருகிறோம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications