பாஜகவிலிருந்து காயத்ரி விலக அலிஷா அப்துல்லா காரணமா? ட்வீட்டில் அந்த வார்த்தையை நோட் பண்ணீங்களா?
சென்னை: பாஜகவிலிருந்து விலகியதற்கான காரணங்களை அடுக்கிய காயத்ரி, அதில் முக்கியமாக கூறியிருந்தது சம உரிமை என்பதுதான். இவர் யாரை எந்த விஷயத்தை மனதில் வைத்து பேசியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
பாஜகவிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் தமிழக பாஜகவிலிருந்து நான் விலகும் முடிவை கனத்த இதயத்துடன் எடுத்துள்ளேன். இதற்கான காரணம் என்னவெனில் என்னிடம் விசாரணை நடத்த சந்தர்ப்பம் வழங்காதது ஆகும்.
அது போல் சம உரிமையும் கொடுக்கவில்லை பெண்களுக்கு மரியாதையும் கொடுக்கவில்லை. அண்ணாமலையின் தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே வெளியே இருந்து டிரோல் செய்யப்படுவதே சிறப்பு என உணர்கிறேன்.

உண்மையான காரியகர்த்தாக்கள்
உண்மையான காரியகர்த்தாகள் குறித்து யாருமே கவலைப்படுவதில்லை. உண்மையான காரியகர்த்தாக்களை அண்ணாமலையால் விரட்டி அடிக்கப்படுகிறார்கள். பாஜக சிறப்பாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். மோடி அவர்களே நீங்கள் என்றுமே எனக்கு ஸ்பெஷல்தான். நீங்கள் தேச தந்தை. என்னுடைய விஸ்வ குரு, சிறந்த தலைவர்.

சாணக்கிய குரு
அமித்ஷா அவர்களே நீங்கள் எனது சாணக்கிய குரு. இன்று நான் ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த புகழ் எல்லாமே அண்ணாமலையையே சாரும். அவர் மிகவும் மோசமான பொய்யர், 8 ஆண்டுகளாக என் மீது அன்பையும் மரியாதையையும் காட்டிய அனைத்து காரியகர்த்தாக்களுக்கும் எனது நன்றி. இத்தனை ஆண்டுகள் பயணித்தது சிறப்பான பயணம் என காயத்ரி ட்வீட் போட்டுள்ளார்.

சம உரிமை
இதில் முக்கியமாக அவர் சொல்லும் விஷயம் என்னவெனில் சம உரிமை. அதாவது அலிஷா அப்துல்லா குறித்துதான் அவர் கூறுகிறார். அண்மையில் அலிஷா அப்துல்லா ஒரு பேட்டி கொடுத்தார். அதில் திருச்சி சூர்யா சிவா என்னை பற்றி அவதூறாக பேசியுள்ளார். அவர் என்னை சந்திக்க எனது அலுவலகத்திற்கு வந்த போது எனது ஆடை குறித்தும் உடல் அங்கங்கள் குறித்தும் பேசியிருந்தார்.

வீடியோ ஆதாரம்
இதெல்லாம் என்னிடம் வீடியோவாக ஆதாரம் இருக்கிறது. இது என் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. நான் ஹனி டிராப் செய்யவில்லை. எனக்கு நடந்த பிரச்சினை குறித்து அண்ணாமலையிடம் கூறியிருந்தேன். அவர் தைரியமாக பிரஸ் மீட் கொடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதனால்தான் நான் கொடுக்கிறேன். எனக்கு அண்ணாமலை மிகவும் சப்போர்ட்டாக இருக்கிறார். அதனால் எனக்கு எந்த பயமும் இல்லை என அலிஷா அப்துல்லா கூறியிருந்தார்.

காயத்ரி ரகுராம்
இந்த பேட்டியை பார்த்த காயத்ரி ரகுராம், அலிஷா அப்துல்லா பொது வெளியில் தன்னுடைய பிரச்சினைகளை பேச அனுமதி உள்ள போது அது எனக்கு ஏன் மறுக்கப்படுகிறது? துபாய் ஹோட்டலில் 150 பேர் முன்னிலையில் அண்ணாமலை என்னை பற்றி அவதூறாக பேசியிருந்தார். எந்த பெண்ணையும் அவமதிக்கும் செயலை நான் அனுமதிக்க மாட்டேன். அலிஷா அப்துல்லாவை கட்சி அலுவலகத்தில் பேச வைத்துள்ளீர்கள். ஆனால் சம உரிமை எனக்கு ஏன் இல்லை. என்னிடம் ஆதாரம் உள்ளது என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications