வீல் சேரில் அமர்ந்து.. அப்படியே ரவுண்டடித்து சிரித்த அந்த சிரிப்பு... மறக்கமுடியாத எச். வசந்தகுமார்!
மறக்க முடியாத சிரிப்புக்கு சொந்தக்காரர் எச். வசந்தகுமார்
சென்னை: வீல் சேரில் உட்கார்ந்தபடியே ஒரு ரவுண்டு அடித்து திரும்பி சிரிக்கும் எம்பி வசந்த்குமார் சிரிப்புக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு.. இந்த "எளிய தொழிலதிபர்" அரசியல்வாதிகளிலேயே கொஞ்சம் வித்தியாசமானவர்.. ஏன் அதிசயமானவர் என்றும் சொல்லலாம்!
Recommended Video
குடிசையிலிருந்து கோபுரத்திற்கு மாறினாலும், ஆடம்பரம் என்ற ஆடையை எப்போதுமே அணியாதவர்.. எளிமை + புன்னகை = இதுதான் வசந்தகுமார்!
38 வருஷத்துக்கு முன்பு தன் நண்பரால் வாடகைக்கு தரப்பட்ட மளிகைக்கடையை வீட்டு உபயோகப்பொருட்கள் விற்கும் கடையாக மாற்றினார்.. இன்று இந்த கிளைகள் 64 கிளைகளுடன் பரந்து பிரிந்து கிடக்கின்றது என்றால், அது வசந்தகுமார் என்ற மனிதரின் துடிக்கும் உழைப்பாலும், துவளாத அர்ப்பணிப்பாலும்தான்!
கொரோனாவுக்கு பலியாகும் முதல் தமிழக எம்பி வசந்தகுமார்.. 2ஆவது மக்கள் பிரதிநிதி
கன்னியாகுமரி
கடந்த 10 வருஷத்துக்கு முன்புதான் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தார்.. வழக்கமாக எல்லோரும் ஓட்டுப் போட காசு தருவார்கள்தான். ஆனால் கன்னியாகுமரி தொகுதி எம்பி எச். வசந்தகுமார் கொஞ்சம் வித்தியாசமானவர். நாங்குநேரி சட்டசபைத் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர்தான் வசந்தகுமார்.
ஒரு லட்சம் ரூபாய்
கடந்த லோக்சபா தேர்தல் வந்ததும் எம்எல்ஏ பதவியை விட்டு விட்டு எம்பி பதவிக்கு வந்தவர்.. பொறுப்பேற்றதுமே, இவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.. அதாவது தனது மாத சம்பளமான ஒரு லட்சம் ரூபாயை தொகுதி மக்களுக்காக செலவிடப் போகிறேன். அதுவும் ஏழைகளுக்கும், கல்விக்காகவும் செலவிடப் போவதாக அவர் சொன்னதுமே அந்த தொகுதி மக்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
ஆச்சரியம்
வழக்கமாக ஜெயிப்பதற்காகத்தான் பணத்தை இறக்குவார்கள்... ஆனால் வசந்தகுமாரோ ஜெயித்த பிறகு பணத்தை இறக்குகிறார்... இத்தனைக்கும் இந்த அறிவிப்பை வெளியிடும்போது அவர் எம்பியா கூட பதவியேற்கவில்லை... அதற்குள் மக்களுக்காக தனது சம்பளத்தையே ஒதுக்கியதை அனைத்து கட்சியிலுமே ஆச்சரியமாக பார்த்தனர். அதேபோல, இவரது ‘வெற்றிப் படிக்கட்டு' என்ற தலைப்பில் வசந்த் தொலைக்காட்சியில் உரையாற்றி வந்தது பெரிதும் வரவேற்பை பெற்றது.
நம்பிக்கை வார்த்தைகள்
வாழ்க்கையில் வெற்றி பெற துடிக்கும் அனைவரையும் ஊக்குவிக்கும் விதமாகவும், தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி அமைத்துக்கொள்ளும் விதமாகவும் அவரது எளிய உரை எல்லோர் மனசிலும் எளிதாக பதிந்தது. "இங்கு எதுவும் சுலபம் இல்லை... சின்னச் சின்ன விஷயங்களில் இருந்து ஒவ்வொன்றையும் படிப்படியாகதான் பிளான் செய்ய வேண்டும்.. ஏதாவது தடைகள் வந்தால், அதை தகர்க்க போராடுவதற்கு பதில், செல்லும் திசையை மாற்றி முன்னேறி செல்ல வேண்டும்" என்ற சூட்சுமம்தான் இவரது தாரக வார்த்தைகள்.
சமையல் போட்டி
முன்பெல்லாம் தூர்தர்ஷனில் சமையல் போட்டி ஒன்று நடக்கும்.. இவர்தான் அதன் விளம்பரதாரர்.. இல்லத்தரசிகள் 3 பேரை வரவழைத்து சமையல் செய்யும் போட்டி வைத்து, அதில் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.. அந்த சமையலையும் பாரம்பரிய உணவு முறையில் செய்ய வலியுறுத்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் கடைசியில் டேஸ்ட் பார்த்து, பரிசு வழங்குவது வசந்த்குமார்தான்.. கேஷூவலாக சாப்பிட்டு கொண்டே, "இதில் என்னவெல்லாம் போட்டு செஞ்சீங்க" என்று சமையல் பதத்தை இவர் கேட்கும் தொணியே அலாதிதான்!
நல்ல மனிதர்
ரொம்ப நாணயமானவர்.. எந்த பந்தாவும் இவரிடம் இருக்காது. எப்போதுமே அந்த சிரிப்புதான் இவரது ஸ்பெஷல்.. யாரையுமே நோகடித்து பேச மாட்டார்.. கடந்த மாதம்கூட இவர் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "கொரோனா தாக்கம் இன்னும் ஓரிரு மாசத்தில் கட்டுக்குள் வரும்.. எனக்கு முழுசா நம்பிக்கை இருக்கு.. இருந்தாலும், தமிழக அரசை குறைகூறும் காலம் இதுவல்ல" என்று எதிர்க்கட்சி என்றும் பாராமல், அரசை பாராட்டிய மனசு யாருக்கும் பெரும்பாலும் வராது. இந்த வெள்ளந்தி மனிதனின் உழைப்பும், சேவையும், நம்பிக்கை வரிகளும், தமிழக மக்களின் உள்ளங்களில் பசுமரத்தாணியாய் என்றென்றும் வாழும்!