தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடத்த ஆட்சேபணை இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் அரையாண்டு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் எந்தவித ஆட்சேபமும் இல்லை என்றுஅமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் அரையாண்டு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் எந்தவித ஆட்சேபமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த பத்து மாத காலமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுவரை தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு, இடைப்பருவத் தேர்வுகள் நடத்தப்பட்டு விட்டன.
டிசம்பர் மாதத்தில் பள்ளிகளில் வழக்கமாக அரையாண்டு தேர்வுகள் நடைபெறும். இன்னும் பள்ளிகள் எப்போது திறப்பது என்றே முடிவு செய்யப்படாத நிலையில் அரையாண்டு தேர்வு நடத்துவது பற்றி அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் யோசிக்கவே இல்லை.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார். தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் அரையாண்டு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம். எந்தவித ஆட்சேபமும் இல்லை என்றும் தெரிவித்தார் செங்கோட்டையன்.
தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே பள்ளிக் கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
நடப்பாண்டில் மாணவர்கள் நலன் கருதி 50 சதவிகித பாடக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும் தான் தேர்விற்கு வினாக்கள் கேட்கப்படும் என்றும் தெரிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்.