2 கைகள் இல்லாத “லட்சுமி”.. காலில் “ஓவியம்”! சு.வெங்கடேசன் உதவியால் அரசு கல்லூரியில் மாணவிக்கு “சீட்”
சென்னை: 2 கைகள் இல்லாமல் அபாரமாக ஓவியம் வரையும் திறன் கொண்ட லட்சுமி என்ற மாணவிக்கு அரசு கல்லூரியில் சீட் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் முன்வைத்த கோரிக்கையை ஏற்று அவருக்கு கும்பகோணம் அரசு கவின் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில், 2022-2023 ம் கல்வியாண்டிற்கு இளங்கவின்கலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்காக செப் 2 அன்று நடைபெற்ற தேர்வில் 281 பேர் பங்கேற்றனர். அதில் 141 பேர் தேர்ச்சி பெற்றனர். இத்தேர்வில் லட்சுமி என்ற இருகைகளையும் முற்றிலுமாக இழந்த மாற்றுத்திறனாளி மாணவி தனது கால்களால் தேர்வெழுதி விண்ணப்பித்துள்ளார்.
அவர் புனையா ஓவியம் (Drawing) தேர்வில் 50 மதிப்பெண்ணும், நீர்வண்ணத்தேர்வில் (Water Colour) 108 மதிப்பெண்ணும் மற்றும் கருத்தியல் (Theory) தேர்வில் 24 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். ஆனால் லட்சுமி புனையா ஓவியம் (Drawing) தேர்வில் 20 மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் இவருக்கு சேர்க்கை கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மத்திய பல்கலை. நுழைவுத் தேர்வு! மதுரை மாணவனுக்கு லட்சத்தீவில் தேர்வு மையம்! கொதித்தெழும் வெங்கடேசன்!
கோரிக்கை
லட்சுமி தான் இரு கைகளையும் முற்றிலும் இழந்த மாற்றுத்திறனாளி என்றும், இருப்பினும் கலையின் மீதான ஆர்வத்தின் காரணமாக தொடர்ச்சியாக நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிகள் மேற்கொண்டு தன் கால்களால் தேர்வெழுதியதை சுட்டிக்காட்டி இக்கல்லூரியில் தனக்கு கல்வி பயில இடம் வேண்டி விண்ணப்பித்துள்ளார்.
சீட் ஒதுக்கீடு
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், 2022-2023 ம் கல்வியாண்டில் மட்டும் சிறப்பு நேர்வாக கூடுதலாக ஒரு இருக்கை ஒதுக்கீடு செய்திடவும் லட்சுமி என்பவரது உடற்தகுதியினை கருத்தில் கொண்டு வண்ணக்கலைத் துறையில் கல்வி பயில அனுமதிக்க வேண்டுமாய் தேர்வுக்குழுவின் ஒப்புகையுடன் கல்லூரி முதல்வர் பரிந்துரை செய்துள்ளதாக கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கூடுதல் இருக்கை
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின்படி தேர்வு பட்டியலில் முதலிடத்தில் உள்ள மாணவர் கார்த்திக் தங்கராஜன் என்பவர் கலந்தாய்வுக்கு வராததால் அவருக்கு அடுத்துள்ள மாணவி செல்வி ஜெய்ஸ்ரீக்கு மட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின்படி தேர்வு வாய்ப்பு உள்ளது. அதற்கடுத்த நிலையில் உள்ள லட்சுமி என்பவருக்கு வாய்ப்பு வழங்க ஒட்டுமொத்தமாக இளங்கவின் கலை முதலாமாண்டு 65 மாணவர் சேர்க்கையில் 65+1 (கூடுதல்) 66 என்கிற அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் சிறப்பு தேர்வாகக் கருதி கூடுதலாக 1 மாணவரை சேர்ப்பதற்கு அனுமதி வழங்குமாறு கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசாணை
இதனை பரிசீலனை செய்து, கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு இளங்கவின் கலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கையில் மாற்றுத்திறனாளியான லட்சுமிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் சிறப்பு நேர்வாகக் கருதி கூடுதலாக 1 மாணவர் சேர்ப்பதற்கு (65+1 (கூடுதல்) = 66) அனுமதி வழங்கி ஆணையிடுகிறது.
மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு
வருங்காலங்களில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம், 2016, 32ல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு கலை பண்பாட்டுத் துறையின் பிரிவு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிய ஒதுக்கீட்டினை முறையாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
சு.வெங்கடேசன் ட்வீட்
இதுகுறித்து ட்விட்டரில் சு.வெங்கடேசன் வெளியிட்டு இருக்கும் பதிவில், "இரு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளியான மாணவி த.லட்சுமி, கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வில் கால்களால் ஓவியம் வரைந்துள்ளார். மதிப்பெண் குறைவு என்ற காரணத்தால் சேர்க்கை கிடைக்கவில்லை. இந்தப் பிரச்சனையை அரசின் கவனத்திற்குக் கொண்டுசென்றேன். விளிம்பு நிலையினருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் சட்டவிதிகள் வளைந்து கொடுப்பதுதான் ஜனநாயகத்தின் அழகு.
மாணவிக்கு கிடைத்த சீட்
அரசாணைகளுக்கு மனிதத்தன்மையே அடிப்படையாக இருக்க வேண்டும். துறையின் அமைச்சரிடமும் துறையின் செயலாளரிடமும் வலியுறுத்தினேன். எமது கோரிக்கையை ஏற்று மாணவி த.லட்சுமிக்கு கல்லூரியில் சேர்க்கை வழங்க புதிய அரசாணையே பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவன்றோ செயல். பெருமகிழ்வு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு என நெஞ்சார்ந்த நன்றி." என்று குறிப்பிட்டு உள்ளார்.