இன்று முதல் மூன்று நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை பெய்யப்போகுது... வானிலை மையம் குட் நியூஸ்
தமிழகத்தில் வளி மண்டல சுழற்சி காரணமாக தேனி, நீலகிரி கோவையில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் கடலோரம் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. இன்றைய தினம் சென்னை வானிலை மையம் மழை குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்காலில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும். தேனி, நீலகிரி, கோவையில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளைய தினம் நவம்பர்4ஆம் தேதி மதுரை, சிவகங்கை, தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அடுத்த 72 மணிநேரத்தில் அதாவது நவம்பர் 5ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தேனி மாவட்டத்தில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. நீலகிரியில் 8 செமீ மழை பதிவாகியுள்ளது.