தொடர்மழை காய்கறிகள் விலை தாறுமாறு... தக்காளி விலை கிலோ ரூ.120 ஆக விற்பனை
தொடர் மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. இதேபோல் மற்ற காய்கறிகள் வரத்தும் கனமழையால் குறைந்துள்ளதால் விலை அதிகரித்து காணப்படுகிறது.
சென்னை: தொடர் கனமழை காரணமாக தமிழகம் முழுவதும் காய்கறிகளின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிலோ தக்காளி 120 ரூபாயை எட்டியுள்ளது. வரத்து குறைவு காரணமாக வெங்காயம், கத்தரிக்காய் உள்ளிட்ட பல காய்கறிகளும் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
Recommended Video
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. திருப்பூர்,ஈரோடு, கோவை மாவட்டங்களில் பலத்த மழை பெய்து எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
தொடர் மழை காரணமாக காய்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விளைநிலங்களிலேயே காய்கறிகள் அழுகத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக சந்தைகளுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. மொத்த சில்லறை விற்பனைக் கடைகளில் காய்கறி விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகள் வரத்து குறைவால் விலை உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல கத்தரிக்காய், வெண்டைக்காய் கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ஈரோடு பெரிய மார்க்கெட்டில் வெளி மாநிலங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறிகள் வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கத்தரிக்காய் இன்று 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேப்போல் வெண்டைக்காய் 100 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அவரைக்காய், கேரட் ஆகிய பல காய்கறிகளும் ஒரு கிலோ 70 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது.
கடந்த வாரம் 100ரூபாய்க்கு விற்பனையான தக்காளி விலை இந்த வாரம் சில்லரை விற்பனையில் ரூ.120க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. இதேபோல் மற்ற காய்கறிகள் வரத்தும் கனமழையால் குறைந்துள்ளதால் விலை அதிகரித்து காணப்படுகிறது. காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.