தொடர்ந்து மிரட்டும் பருவ மழை.. தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. புவியரசன் தகவல்
சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் உள்பட 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் பேட்டி அளித்த இயக்குர் புவியரசன், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், உள்ளிட்ட 16 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஏன் சொல்லவில்லை? மீட்டிங்கில் முதல்வர் ஸ்டாலின் கேட்ட கேள்வி.. பரபரத்த தலைமைச்செயலக அதிகாரிகள்!
16 மாவட்டங்களில் ரெட் அலர்ட் !
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக புவியரசன் தெரிவித்தார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலமானது
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது அது தென் மேற்கு வங்க கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலைகொண்டுள்ளது. மேலும் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னைக்கு அருகில் கரையை கடக்க கூடும் என புவியரசன் தெரிவித்தார்.
இன்று எங்கெல்லாம் மழை?
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருதால் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை , திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், டெல்டா, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்கள் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யும் என வாலிமை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மற்ற மாவட்டங்களில்?
அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருச்சி, கரூர் திருப்பூர், கோவை, நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னையில்....
அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்தார்.
புயலாக மாறாது
மேலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 300 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதாகவும், அதேசமயம் மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை என்றாலும் திட்டவட்டமாக தெரிவித்தார் புவியரசன். இதனால் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் எனவே மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் தெரிவித்தார்.
Recommended Video
நாளை முதல் மழை குறையும்
அதே சமயம் நாளை பிற்பகலுக்கு பின்னர் மழைப் பொழிவு குறையத் தொடங்கும் என்று தெரிவித்த புவியரசன், சராசரியாக இயல்பை விட இந்த ஆண்டு மழை அதிகமாக கிடைத்துள்ளதாக கூறினார். அதே சமயம் நவம்பர் 19, 20, 21, 22ம் தேதிகளிலும் வடதமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக புவியரசன் தெரிவித்தார். மேலும் கடந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் குந்தலம் கிராமத்தில் 20 செ.மீ. மழை பொழிந்துள்ளதாக குறிப்பிட்டார்.