சென்னையில் சுடும் சூரியன்..11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை - குடை அவசியம்
தமிழகத்தில் இன்றும் நாளையும் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அக்னி நட்சத்திர காலம் முடிந்த பின்னரும் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மாலை நேரங்களில் மழையும் பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. லால்குடி, வால்பாறை,சோலையார், தாளவாடி ஆகிய பகுதிகளில் 6 செமீ மழை பதிவாகியுள்ளது.
சின்னக்கல்லார், ஈரோடு, கெட்டி, வேப்பந்தட்டையில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது. திருச்செங்கோடு, தக்கலையில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது. கரூர், குந்தாபாலம், தேவாலா, குழித்துறை, ஓசூர், பவானி, அவலாஞ்சியில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
தமிழக பகுதிகளின் மேலடுக்கில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக, இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடி மின்னலுடன் கனமழை
நாளைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் சுடும் சூரியன்
சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு கேரளா, இலட்சத்தீவு அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல், குமரிக்கடல் பகுதிகள், தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகளில் பலத்தக்காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 3 மற்றும் 4ஆம் தேதியன்று தென்மேற்கு வங்கக்கடலோரப்பகுதிகளில் பலத்தக்காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications