இறுகும் பிடி.. ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பாஜக பொருளாளர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: லோக்சபா தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு வரும் வியாழக்கிழமை நேரில் ஆஜராகுமாறு பாஜக பொருளாளர் எஸ் ஆர் சேகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பணம் கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலை அடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது, திருநெல்வேலி தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆட்கள், 3 கோடியே 98 லட்சத்து 91 ஆயிரத்து 500 ரூபாயை கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பாஜக
வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பா.ஜனதா கட்சியின் தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்த சம்மனை எதிர்த்து பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். அவரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகியிருந்தார்.
இந்தநிலையில், பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தாக்கல் செய்திருந்த மனுவில், தான் ஏற்கனவே கோவையில் சிபிசிஐடி போலீசார் தன்னிடம் விசாரணை நடத்திய நிலையில், தொடர்ந்து சம்மன் அனுப்பி வருவதாகவும், தன்னை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர் சி பால் கனகராஜ், ஏற்கனவே விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் விசாரணை தேவையற்றது என்று வாதிட்டார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் உதயகுமார், விசாரணைக்கு ஆஜராவதில் என்ன தயக்கம் என்றும் ஏற்கனவே அமைப்புச் செயலாளர் ஆஜராகி உள்ளார் என்றும் வாதிட்டார். தொலைபேசி உரையாடல் குறித்து விசாரிக்க வேண்டி உள்ளது என்று கேட்டுக் கொண்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வருகிற வியாழக்கிழமை எஸ்.ஆர்.சேகர் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் செல்போனை ஒப்படைக்கும்படி வலியுறுத்தக் கூடாது என சிபிசிஐடி போலீசாருக்கும் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications