ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தலை நிறுத்தியது ஏன்? தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்ட ஹைகோர்ட்
சென்னை: தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலை விரைந்து நடத்தக் கோரிய வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் நாளை விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் 15 வார்டுகளை கொண்ட ஆடுதுறை பேரூராட்சியில் 4 இடங்களில் திமுகவும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 இடங்களிலும், மதிமுக ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது. அதேபோல் பாமக 4 இடங்களிலும் அதிமுக 2 இடங்களிலும் சுயேட்சைகள் 2 இடங்களிலும் வெற்றிகண்டனர்.
''கோயிலுக்கு வரும்போது முறையா ஆடை அணிந்துவாங்க..'' - அட்வைஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்
தலைவர் போட்டியில் மதிமுக, பாமக
இதில் பேரூராட்சித் தலைவர் வேட்பாளராக மதிமுக சார்பில் வெற்றிபெற்ற ரா.சரவணனை திமுக தலைமை நிறுத்தியுள்ளது. அதேநேரம் பா.ம.க. சார்பில் வெற்றிபெற்ற வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ம.க.ஸ்டாலினும் பேரூராட்சித் தலைவர் போட்டியில் இறங்கியுள்ளார். இதில் பேரூராட்சித் தலைவராக 8 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவதால் குதிரை பேரம் நடைபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகக்கூறி வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்கள் வீடு முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கவுன்சிலர்கள் ரகளை
ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், வார்டு உறுப்பினர்களிடையே மோதல் வெடித்ததால் மறைமுக தேர்தல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில், மறைமுக தேர்தலை நடத்தக் கோரி பாமகவை சேர்ந்த ம.க.ஸ்டாலின் உட்பட 8 வார்டு உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், 15 உறுப்பினர்களில் 8 பேரின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும், மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்ட 4 ஆம் தேதி திமுக உறுப்பினர்கள் 3 பேர் வராததால், கூட்டணி கட்சியைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான வேட்புமனுக்களை கிழித்து ரகளையில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
மறைமுக தேர்தலை நடத்த கோரிக்கை
குதிரை பேரம் மற்றும் கட்சி தாவல் சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால் உரிய போலீஸ் பாதுகாப்புடன், உடனடியாக ஆடுதுறை பேரூராட்சிக்கான மறைமுக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறும் அவர்கள் மனுவில் கோரியுள்ளனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, பரத சக்கரவர்த்தி அமர்வு மாநில தேர்தல் ஆணையம் இதுகுறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நாளை ஒத்தி வைத்தது.