ரூ.15 கோடி மோசடி பணத்தில் சொத்து.. “சிபிஐ வழக்கு இல்லை.. ஆனால்..” ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
சென்னை : கடன் மோசடி வழக்கில் சிபிஐ-யால் குற்றம்சாட்டப்படாவிட்டாலும், மோசடி பணத்தின் மூலம் சொத்துக்கள் வாங்கியவருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
போலி ஆவணங்களைக் கொடுத்து 15 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மோசடி பணம் மூலம் வேறு சிலர் பெயர்களில் நிலம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
நிலம் வாங்கியவர், தன் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யாத நிலையில், அமலாக்கத்துறை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பதை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
நர்சிங் படிப்புகளில் மூன்றாம் பாலினத்தவரை சிறப்பு பிரிவில் சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ரூ. 15 கோடி மோசடி
கடந்த 2008-ஆம் ஆண்டு குளோபல் டிரேட் பைனான்ஸ் என்கிற தனியார் நிதி நிறுவனத்தில், போலி ஆவணங்களைக் கொடுத்து 15 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக ஜி.சீனிவாசன், ஆர்.மனோகரன் மற்றும் வங்கி மேலாளர் எஸ்.அறிவரசு உள்ளிட்ட பலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த 15 கோடி ரூபாயை பயன்படுத்தி, புதுக்கோட்டை என்ற கிராமத்தில் பி.வெங்கடாச்சலபதி, பி.ராஜேந்திரன் மற்றும் கே.விக்னேஷ் ஆகியோரது பெயர்களில் ஜி.சீனிவாசன் 166 ஏக்கர் நிலம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை
இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் தனக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்யாத நிலையில், அமலாக்கத்துறை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பதை ரத்து செய்யக்கோரி பி.ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
சொத்து
இந்த வழக்கை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில், மோசடியாக பெறப்பட்ட பணத்தின் மூலமாக மனுதாரர் பெயரில் சொத்து வாங்கப்பட்டுள்ளதால், அவர் குற்றச்செயலுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளார் என்பதால் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிப்பதில் எந்த விதிமீறலும் இல்லை என வாதிடப்பட்டது.
செல்லும்
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சிபிஐ தொடர்ந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபராக இல்லை என்றாலும், குற்றத்தின் மூலமாக பெறப்பட்ட தொகையில் மனுதாரர் பெயரில் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதால், அவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது சட்டவிரோதம் அல்ல, எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.