ஹிந்தி.. அமித் ஷா கருத்து பற்றி தெரியாது என்ற எடப்பாடி.. விடவில்லை ஓபிஎஸ்.. "பதிலடி" அறிக்கை
இந்தி மொழி தேவை என்கிற பட்சத்தில், இந்தி மொழியை தாங்களாகவே மனமுவந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக கற்றுக் கொள்ளலாம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியவாறு, இந்தி மொழி தேவையெனும் பட்சத்தில் மனமுவந்து கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் கற்றுக் கொள்ளலாம் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். ஆனால் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பேரறிஞர் அண்ணா அவர்கள் வழியில் இருமொழிக் கொள்கையில் அஇஅதிமுக உறுதியாக உள்ளதாகவும் ஓ.பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.

அமைச்சரவையின் 70 சதவீத செயல் திட்டங்கள் இந்தி மொழியில்தான் தயாரிக்கப்படுகிறது. 9ஆம் வகுப்பு வரையில் இந்தி தொடர்பான அடிப்படை அறிவை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். இதேபோன்று இந்தி மொழிப் பயிற்சி, தேர்வுகளுக்கும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அமித் ஷா கூறியுள்ளார். அமித் ஷாவின் இந்த கருத்து தென்னிந்திய மாநிலங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மத்திய அமைச்சரவைக்கான எழுபது விழுக்காடு நிகழ்ச்சி நிரல் இந்தி மொழியில் தான் தயாரிக்கப்படுகிறது என்றும், மற்ற மொழிகளை பேசும் மாநில மக்கள் இந்திய மொழியில் பேச வேண்டுமென்றும், ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் நாடாளுமன்ற ஆட்சிமொழிக் குழுவின் தலைவர் என்ற முறையில் மாண்புமிகு உள் துறை அமைச்சர் அவர்கள் பேசியிருப்பதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வந்துள்ளன.
இந்தி மொழி தேவை என்கிற பட்சத்தில், இந்தி மொழியை தாங்களாகவே மனமுவந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக கற்றுக் கொள்ளலாம் என்றும், அதே சமயத்தில் இந்தி திணிப்பு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறி இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இன்று வரை இந்தியாவில் ஆங்கில மொழி இருக்கிறது என்றால் அதற்கு மூலக் காரணம் பேரறிஞர் அண்ணா அவர்கள். பேரறிஞர் அண்ணா அவர்களின் இருமொழிக் கொள்கையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருக்கிறது என்பதையும், தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போதே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு தெளிவாக்கப்பட்டுவிட்டது என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
அமித் ஷாவின் இந்தி மொழி கருத்து பற்றி எதுவும் தெரியாது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறிய நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தனது நிலைப்பாட்டை அறிக்கையாக வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications