சூரசம்ஹார நேரம்.. உடுமலை, முருகன் வெள்ளி வேலை காணோம்.. இந்து முன்னணி ஆவேசம்
சென்னை: உடுமலையில் பழமையான பிரசன்ன விநாயகர் கோயிலில் நடந்த சூரசம்ஹார விழா தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிர மணியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் சூரசம்ஹாரமும் ஒன்று. சூரபத்மன் எனும் அரக்கனை அழித்தது நினைவாகவே இந்த விழா கொண்டாடப்படுகிறது.
சூரபத்மன் என்ற அரக்கனை முருகன் அழித்த நிகழ்வே சூரசம்ஹாரமாக கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுக்க உள்ள முருகன் கோயில்களில் இந்த நிகழ்வு விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

சூரசம்ஹாரம்
தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் கந்த சஷ்டி விழா கோலாகலமாகத் தொடங்கியது. இந்த காலகட்டத்தில் பக்தர்கள் விரதம் இருந்து முருகனை வழிபட்டனர். ஆறாவது நாளில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது. அறுபடை வீடுகளில் மட்டுமின்றி, தமிழகத்தில் இருந்த அனைத்து முருகன் கோயில்களிலும் சூரசம்ஹாரம் சிறப்பாக நடந்தது.

உடுமலை முருகன் கோயில்
அதன்படி உடுமலையில் பழமையான பிரசன்ன விநாயகர் கோயிலில் முருகன் சிலை உள்ள நிலையில், அங்கும் கந்த சஷ்டி விழா சிறப்புப் பூஜைகள் நடந்தன. ஆறாம் நாளில் சூரசம்ஹார விழாவும் கூட நடைபெற்றது. கடந்த காலங்களில் இந்த விழாவில் வெள்ளி வேல் பயன்படுத்தப்படும் நிலையில், இந்தாண்டு மட்டும் வெள்ளி வேலை பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

காடேஸ்வரா சுப்பிரமணியம்
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உடுமலையில் பழமையான பிரசன்ன விநாயகர் கோயிலில் முருகன், சிவபெருமான் சிலைகள் உள்ளன. 1962-ம் ஆண்டுமுதல் கந்த சஷ்டி விழா சிறப்புப் பூஜைகள் மற்றும் சூரனை வதம்செய்யும் நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.

பக்தர்கள் ஏமாற்றம்
சூரனை வதம்செய்ய, வெள்ளி வேல் பயன்படுத்துவது வழக்கம். ஆண்டுதோறும் இந்நிகழ்வின்போது மட்டுமே முருகன் கையில் வெள்ளி வேல் இருக்கும். மற்றநாட்களில் பாதுகாப்பு அறையில் வேல் வைக்கப்படும். ஆனால் நடப்பாண்டில் கந்தசஷ்டி விழாவின்போது வெள்ளி வேல் பயன்படுத்தப்படவில்லை. வெள்ளி வேல் தரிசனம் கிடைக்காமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

வெள்ளி வேல்
அறநிலையத் துறை அதிகாரியின் மெத்தனப் போக்கால், ஆகம விதிகள் மீறப்பட்டது பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வெள்ளி வேல் திருடு போயிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் விசாரித்து, வெள்ளி வேலின் உண்மை நிலைமையைக் கண்டறிய வேண்டும்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications