தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு.. வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் குறைக்க மாநிலத்தில் வரும் மே 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மருந்து பொருட்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனாவை ஒழிக்க.. 5 கோடி பேர் தடுப்பூசி போட வேண்டும்.. இதுதான் ஒரே வழி- அமைச்சர் பேட்டி
20ஆம் தேதி முதல் தடுப்பூசி
அதனைத் தமிழக அரசு சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் வரும் மே 20ஆம் தேதி முதல் 18-44 அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இதனைத் தொடங்கி வைப்பார்.
மாற்றுத்திறனாளிகள்
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி செலுத்தப்படும். கொரோனா பாதிப்பைக் குறைக்க ஒரே வழி ஊரடங்கு தான். ஊரடங்கு வரும் காலங்களில் நீட்டிக்கப்படுமா என்பது வரும் நாட்களில் தான் தெரியும். தமிழ்நாட்டில் 7,8 மாவட்டங்களில் மட்டும் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. அந்த மாவட்டங்களில் ஊரடங்கைக் கடுமையாகப் பின்பற்ற ஆட்சியருக்கு அறிவுரை வழங்கியுள்ளோம். ஊரடங்கு முடிவதற்குள்ள கொரோனா பாதிப்பு நிச்சயம் மேலும் குறையும்.
போலி ரெம்டெசிவிர்
இன்று காலை திண்டிவனத்தில் மருத்துவர் ஒருவருக்கு போலியான ரெம்டிசிவர் மருந்தை அளித்ததால் அவர் உயிரிழந்தாக என புகார் அளிக்கப்பட்டது. போலி ரெம்டெசிவிரை விற்பனை செய்ததாக சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த தனியார் தனியார் மருத்துவமனைக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கார் ஆம்புலன்ஸ்
மேலும், மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் நோயாளிகள் வீடுகளிலேயே ஆக்சிஜனை எடுத்துக்கொள்வது தவறு. மக்கள் யாரும் இப்படி செய்யக் கூடாது. சென்னையில் கார் ஆம்பூலன்ஸ் திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக பிரதமர் பாராட்டினார். இந்த கார் ஆம்பூலன்ஸ் திட்டத்தை இந்தியாவின் மற்ற மாநகராட்சிகளும் இந்த திட்டத்தைப் பின்பற்றலாம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்" என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.