அதெப்படி ஒரு டாக்குமெண்ட்ரியால் நாட்டின் இறையாண்மை பாதிக்கும்? ஏகே அந்தோணி மகனுக்கு சசி தரூர் கேள்வி
பிரதமர் மோடி குறித்த ஆவணப்பட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன், காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளதை மற்றொரு மூத்த தலைவர் சசிதரூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லி: பிரதமர் மோடி தொடர்பான ஒரு ஆவணப்படத்தால் நாட்டின் இறையாண்மை எப்படி பாதிக்கும்? என காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்த ஏகே அந்தோணியின் மகன் அனிலுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் சசிதரூர் கேள்வி எழுப்பி உள்ளார்.
2002-ம் ஆண்டு குஜராத்தில் முதல்வராக பதவி வகித்தார் தற்போதைய பிரதமர் மோடி. குஜராத்தில் 2002-ல் உலகை அதிரவைத்த மதவன்முறைகள் நிகழ்ந்தன. இம்மத மோதல்களில் இஸ்லாமியர்கள் 1,000க்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக பிபிசி ஊடகமானது ஒரு ஆவணப்படம் வெளியிட்டது. இந்த ஆவணப்படம் பிரதமர் மோடிக்கு எதிராக இருக்கிறது என்பது மத்திய அரசின் குற்றச்சாட்டு.
பிரதமர் மோடி பிபிசி ஆவணப்படம்.. கேரளா காங்கிரஸில் பிரளயம்.. ஏகே ஆண்டனியின் மகன் திடீர் ராஜினாமா!
இதனையடுத்து குஜராத் படுகொலைகள், பிரதமர் மோடி தொடர்பான இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட தடை செய்யபப்ட்டது. சமூக வலைதளங்களில் இருந்து நீக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் நாட்டில் மோடி குறித்த இந்த ஆவணப்படம் இப்போது அரசியலாகி இருக்கிறது.
கேரளாவில் ஆளும் இடதுசாரி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவை மோடி குறித்த இந்த ஆவணப்படத்தை பல இடங்களில் பொதுமக்களுக்காக ஒளிபரப்பு செய்தன. தெலுங்கானாவிலும் மோடி குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தில் இந்த ஆவணப்படத்தை திரையிடுவது தொடர்பாக பெரும் சர்ச்சை, மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. ஆவணப்படங்களை திரையிடுவதற்கு பல மாநிலங்களில் பாஜகவினர் கடுமையாக எதிர்த்தனர்.
அதேநேரத்தில் காங்கிரஸில் இந்த விவகாரம் கலகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிடுவதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில், பாஜகவினரைப் போலவே முதலில் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அனில் கூறுகையில், பாஜகவுடன் நமக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் இத்தகைய ஆவணப்படத்தை ஆதரிப்பது, ஒளிபரப்பு என்பது இந்திய இறையாண்மை மீதான மதிப்பை சீர்குலைப்பதாகும் என சீறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அந்தோணியின் மகன் அனில் அந்தோணி அறிவித்துள்ளார். மேலும் தம்முடைய கருத்துகளுக்கு சகிப்புத்தன்மையற்ற பதில்கள் வந்தன. நான் அன்பையே ஊக்கப்படுத்துகிறேன் எனவும் அனில் தமது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அனில் அந்தோணியின் இந்த ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர், ஒரு டாக்குமெண்ட்ரி, ஆவணப்படத்தால் ஒரு நாட்டின் இறையாண்மை எப்படி பாதிக்கும்? பிபிசி ஆவணப்படத்தின் மீதான மத்திய அரசின் தடை என்பது தேவையற்றது என்றார்.