ஆவேசமாக வார்த்தையைவிட்ட ஆர்.எஸ்.பாரதி.. ஆளுநர் மாளிகைக்கு பறந்த உளவு ரிப்போர்ட்.. ஆங்ரி மோடில் பாஜக!
சென்னை: அதிரடியாக பேசுவதும், சர்ச்சைகளை உருவாக்குவதும் திமுகவின் முன்னாள் எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான ஆர்.எஸ்.பாரதிக்கு புதிதல்ல. இந்த நிலையில்தான், ஒரு தகவல் வட்டமடித்து வருகிறது.
இப்படித்தான், ஆர்.எஸ்.பாரதியின் ஒரு விமர்சன பேச்சினை தமிழக ராஜ்பவனுக்கு அனுப்பி வைத்திருக்கிறதாம் மத்திய உளவுத்துறை. ஆளுநரை கோபப்படுத்தக் கூடிய வகையில் உள்ளது அந்த தகவல் என்கிறார்கள்.
பாஜக தலைவரை திடீரென சந்தித்த மமதா! ஒரு வேளை 'அப்படி' இருக்குமோ? காங். சிபிஎம் டவுட்
தமிழக அரசின் வரிப்பணம்
இந்தி திணிப்பு எதிர்ப்பு விளக்க பொதுக்கூட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது திமுக. நேற்று நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில், பாளையங்கோட்டையில் இந்த பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய ஆர்.எஸ்.பாரதி, "கவர்னருக்கு சம்பளம் கொடுப்பது நாம். அவர் டீ குடிப்பது முதல் அவர் வீட்டு வேலையாட்களுக்கு சம்பளம் கொடுப்பது வரை தமிழக அரசின் வரிப்பணம் தான் கொடுக்கப்படுகிறது. ஆனால், நம்முடைய வரிப்பணத்தில் அமர்ந்திருக்கும் அவர், திராவிடத்துக்கு எதிராக பேசுகிறார். கூட்டம் நடத்துகிறார். திராவிடம் என்பதே இல்லை என சொல்கிறார்.
மெண்ட்டலாகத்தான் இருப்பாங்க
ஐ.பி.எஸ். படித்து முடித்துவிட்டு , வேலைக்கு சேருவாங்க, அந்த வேலையை விட்டுட்டு அரசியலுக்கு வர்ற அதிகாரிகளெல்லாம் மெண்ட்டலாகத்தான் இருப்பாங்க" என்று கடுமையாக ஒருமையில் பேசியிருக்கிறார். ஆளுநர் ரவியும், அண்ணாமலையும் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக இருந்தவர்கள். இவர்களைதான் மெண்டல்கள் என ஆர்.எஸ்.பாரதி சொல்லிவிட்டார் என பாஜக ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். இதற்கிடையே, நேற்று நடந்த பொதுக்கூட்டத்தின் முழு வீடியோவையும் குறிப்பாக, ஆர்.,எஸ். பாரதியின் முழுமையான பேச்சையும் கவர்னர் ரவிக்கு அனுப்பி வைத்துள்ளது மத்திய உளவுத்துறை.
முற்றும் மோதல்
ஏற்கனவே, தமிழ ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகள் இணைந்து ஜனாதிபதியிடம் மனு அளித்து இருக்கிற நிலையில், ஆளுநர் குறித்த இத்தகைய விமர்சனங்கள் மேலும் பரபரப்பை பற்ற வைத்து இருக்கிறது. ஆளுநர் - திமுக இடையேயான மோதலுக்கு மேலும் வலுசேர்ப்பது போலவே இத்தகைய பேச்சுக்கள் அமைந்து இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்தாக இருக்கிறது.
தமிழக அரசியல் சூழல்
முன்னதாக, கடந்த 12 ஆம் தேதி இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பவள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா சென்னை வந்திருந்தார். அப்போது, தமிழக அரசியல் சூழல் குறித்து விரிவாக அமித்ஷா ஆலோசித்தாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்று கூட அமித்ஷா வெளிப்படையாக பேசியிருந்தார்.
அமித்ஷாவிடம் பட்டியல்
அமித்ஷாவுடனான சந்திப்பின் போது, பாஜக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போட்டுள்ளதாகவும், தமிழக காவல்துறை அதிகாரிகள் திமுக மாவட்ட செயலாளர்கள் போல நடந்து கொள்கிறார்கள் என்றும் குறிப்பிட்டு அதுபற்றிய விவரங்களையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இப்போது புதிதாக ஒரு பஞ்சாயத்து சேர்ந்துள்ளது. சமீப காலமாகவே ஆளுநர் ரவி திமுகவின் கொள்கைகளான மொழி திணிப்பு எதிர்ப்பு, திராவிட கருத்து ஆகியவற்றுக்கு நேர் எதிராக பொது நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். இது ஆளும் கட்சிக்குள் முனுமுனுப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் வெளிப்பாடுதான், ஆர்.எஸ்.பாரதியின் ஆவேச பேச்சு என்கிறார்கள்.