சபாஷ்..! 3ஆம் அலையை எதிர்கொள்ள என்ன செய்யலாம்... சத்தமில்லாமல் நடவடிக்கைகளை தொடங்கிய தமிழ்நாடு அரசு
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை இப்போது தான் மெல்லக் கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கும் நிலையில், 3ஆம் அலை ஏற்பட்டால் அதைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் சத்தமில்லாமல் தொடங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. இதையடுத்து கொரோனாவைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் 2 வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ஊரடங்கிற்கு பிறகே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியது. தமிழ்நாட்டில் நேற்று 18,023 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
வல்லுநர்கள் ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பரவல் மெல்லக் குறைந்து வருவது அனைவருக்கும் சற்றே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், கொரோனா 3ஆம் அலை எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுக்கத் தொடங்கியுள்ளது. இதற்காகக் கடந்த ஜூன் 3ஆம் தேதி வைராலஜி வல்லுநர் டாக்டர் ஜெயபிரகாஷ் முலியில், என்ஐஇ இயக்குநர் டாக்டர் மனோஜ் முர்ஹேகர் உள்ளிட்ட வல்லுநர்கள் மத்தியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆய்வுகளை நடத்த முடிவு
இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த கூட்டத்தில் 3ஆம் அலை ஏற்படுமா? அப்படி ஏற்பட்டால் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், மூன்றாம் அலை எப்போது ஏற்படும், அது எப்படி மாறுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது ஆகியவை குறித்து விவாதித்தோம்" என்றார். மூன்றாம் அலை குறித்துக் கணிக்கத் தரவுகள் முக்கியம் என்பதால் சீரோ சர்வே எடுக்கவும் அதிகளவில் genome sequencing செய்யும் முடிவெடுக்கப்பட்டது.
ஆய்வுகள் ஏன் தேவை
மாநில அரசு சார்பில் கடந்த அக்டோபர் - நவம்பர் காலகட்டத்திலும் ஏப்ரல் மாதத்திலும் சீரோ சர்வே எடுக்கப்பட்டது. அடுத்து வரும் ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில் 3ஆவது சீரோ சர்வே எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் எத்தனை பேரின் உடலில் கொரோனா ஆன்டிபாடிகள் உள்ளன என்பதைக் கண்டறிய முடியும். இதன் மூலம் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர் என்பதை நம்மால் எளிதாகக் கண்டறிய முடியும். அதற்கு ஏற்றார் போலத் திட்டத்தை வகுக்கலாம்.
எப்படி ஏற்படும்
இது குறித்து ஐசிஎம்ஆர் வைராலஜி பிரிவைத் தலைவராக இருந்த டாக்டர் ஜேக்கப் ஜான் கூறுகையில், "மூன்றாவது அலையை மையப்படுத்த மட்டும் நாம் இப்போது நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது. 3ஆம் அலை எப்படி, எதனால் ஏற்படும் என்பதை நம்மால் கணிக்க முடியாது. இப்போது இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டடெல்டா (பி .1617.2) மற்றும் கப்பா (பி .1.617.1) வகை கொரோனா மெல்லக் கட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால் மூன்றாம் அலை எதனால் வேண்டுமானாலும் ஏற்படலாம். எனவே, அதற்கு ஏற்றபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
மாவட்ட வாரியாக டாஸ்க் ஃபோர்ஸ்
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்னையிலிருந்து மட்டுமே நடவடிக்கைகளை எடுக்க முடியாது. மாவட்ட வாரியாக டாஸ்க் ஃபோர்ஸ்களை ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் படுக்கைகள் குறைவாக இருந்தால் அதை அதிகப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
குழந்தைகளுக்கு அதிகம் பாதிப்பு?
அதேபோல 3ஆம் அலையில் குழந்தைகள் மத்தியில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கலாம் என்றும் சிலர் எச்சரித்துள்ளனர். அதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கைக்குழந்தைகள் முதல் 18 வயதுடையவர்கள் வரை அனைத்து குழந்தைகளுக்கும் எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும் என வழிமுறைகள் உள்ளன. அதற்கென தனி அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். அனைத்து மருத்துவமனைகளில் குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கத் தேவையான வார்ட்டுகளை ஏற்படுத்தவும் அறிவித்தப்பட்டுள்ளது.
Recommended Video
ஆக்சிஜன் படுக்கைகள்
மேலும், கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஏதுவாக ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது 1200 டன் வரை ஆக்சிஜனை சேமித்து வைக்கும் திறனைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக 200 டன் ஆக்சிஜனை சேமிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரே ஆயுதம் தடுப்பூசி
கொரோனா வைரசுக்கு எதிரான ஒரே ஆயுதம் தடுப்பூசிகள் தான் என்பதால் தடுப்பூசி போடும் பணிகளை விரைவாக மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா 3ஆம் அலையைத் தடுப்பதில் தடுப்பூசி பணிகளே முக்கியமானதாக இருக்க வேண்டும் என்றும் அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தடுப்பூசி பணிகளில் ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் என அதிகம் மக்களைச் சந்திப்பவர்களுக்கு முதலில் முன்னுரிமை அளித்த தடுப்பூசிகளைச் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.