மக்கள் தொகையை கட்டுப்படுத்தனும்.. மோடி நடவடிக்கை எடுப்பாரா? நடிகை கஸ்தூரி திடீர் கேள்வி! பின்னணி
சென்னை: உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா 107 வது இடத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ள நிலையில் நடிகை கஸ்தூரி, இந்தியாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அரசு நடவடிக்கை எடுக்குமா? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
அயர்லாந்து நாட்டின் கன்சர்ன் வேர்ல்ட்வைட், ஜெர்மனியின் வெல்ட் ஹங்கர் ஹில்பே அமைப்புகள் இணைந்து உலக பட்டினி குறியீட்டை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றன. இந்த பட்டினி குறியீடு என்பது பல்வேறு அம்சங்களை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டு வருகிறது.
குறிப்பாக உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகளின் வளர்ச்சி, சிசு மரணம், சரிவிகித உணவு, வயதுக்கேற்க குழந்தைகளின் வளர்ச்சியின்மை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் உணவு பட்டினி குறியீட்டின் அடிப்படையில் நாடுகள் வரிசைப்படுத்தப்படுகின்றன.
இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தடை- கஸ்தூரி ட்வீட்
107 வது இடத்தில் இந்தியா
ஒவ்வொரு நாட்டில் நிலவும் மக்களின் பசி நிலையை காட்டுவது தான் இந்த பட்டியலின் முக்கிய நோக்கமாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான உணவு பட்டினி குறியீடு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 121 நாடுகள் இடம்பெற்றன. இதில் இந்தியா 107 வது இடத்தில் உள்ளது. கடந்தாண்டு 101வது இடத்தில் இருந்த இந்தியா 6 இடங்கள் சரிந்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், வங்கேதசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளை விட இந்தியா பின்தங்கி உள்ளது.
இலங்கை, பாகிஸ்தானை விட மோசம்
இந்த பட்டியலில் இலங்கை 64வது இடம், நோபாளம் 81வது இடம், வங்கதேசம் 84வது இடம், பாகிஸ்தான் 99வது இடத்தில் உள்ளன. ஆசியாவில் இந்தியாவை விட மோசமாக உள்ள ஒரே நாடு தாலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தான் தான். இந்த பட்டியில் ஆப்கானிஸ்தான் 109வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே தான் இந்த பட்டியலை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இந்தியாவின் பிம்பத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் தவறான கணக்கீட்டு முறையால் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது போலி தகவல்களின் அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. உண்மைக்கு புறம்பான இந்த பட்டியலை இந்தியா நிராகரிக்கிறது என கூறப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
இது ஒருபுறம் இருக்க இந்த தரவரிசை பட்டியலை கொண்டு மத்திய பாஜக அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்ய துவங்கி உள்ளன. கொரோனா கால வேலையிழப்பு, படித்து முடித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவற்றால் தான் உலகளாவிய பசி குறியீட்டு பட்டியலை இந்தியா பின்தங்கி உள்ளது. இது மத்திய அரசின் தோல்வியை காட்டுகிறது என எதிர்க்கட்சி தலைவர்கள் சாடி வருகின்றனர்.
நடிகை கஸ்தூரி கோரிக்கை
இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛ஆண்டுக்கு ஆண்டு பசி என்பது பெரிய பிரச்சனையாக மாறி வருகிறத. இது நேரடியாக மக்கள்தொகை மற்றும் வேலைவாய்ப்புடன் தொடர்பு கொண்டது. பொருளாதாரத்தை உயர்த்தவும், மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும் மோடியின் அரசு தீவிர நடவடிக்கை எடுக்குமா?'' என கேள்வி எழுப்பி உள்ளார். இதுமட்டுமின்றி, ‛‛இந்த குறியீடு எப்படி கணக்கிடப்படுகிறது? இலங்கைக்கு 64வது இடமா?'' எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.