கருணாநிதி படத்திறப்பு.. இபிஎஸ்க்கு நானே போன் போட்டு அழைப்பு விடுத்தேன்.. வருத்தப்பட்ட துரைமுருகன்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திறப்பு விழாவிற்கு இபிஎஸ்-க்கு முறைப்படி தொலைபேசியில் நானே அழைப்புவிடுத்தேன், ஆனால் அவர் புறக்கணித்துவிட்டார் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
அன்று எடப்பாடி ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பட திறப்பு விழாவில் திமுகவிற்கு பெயரளவில் மட்டுமே அழைப்பு விடுத்ததால் பங்கேற்கவில்லை என்றும் நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவினர் நேற்று நடைப்பெற்ற படத்திறப்பு விழா மற்றும் சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் கலந்துக் கொள்ளவில்லை

அதிமுக சொன்ன காரணம்
அதிமுகவினர் கலந்துக்கொள்வதும் கலந்துக் கொள்ளாததும், அவர்களின் விருப்பத்தை பொருத்தது. ஆனால் அவர்கள் கூறும் காரணத்தை பார்க்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திறப்பு விழாவில் திமுக பங்கேற்கவில்லை, மேலும் அதிமுகவிற்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்று கூறுகிறார்கள்.

அழைப்பிதழ்
ஆனால் அது உண்மையில்லை. ஜெயலலிதா பட திறப்பு விழாவில், அவர்கள் எங்களுக்கு பெயரளவில் அழைப்பிதழ் மட்டுமே அனுப்பி வைத்தனர்.
ஆனால் சட்டப்பேரவை நூற்றாண்டு விழா கருணாநிதி திருவுருவப்படம் திறப்பு விழா நடத்த திட்டமிட்டபோதே, முதல்வர் ஸ்டாலின் என்னை அழைத்து கூறினார். அதப்படியே எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு, குடியரசு தலைவர், ஆளுநர், முதல்வர் அமரும் வரிசையிலேயே அமர இடம் ஒதுக்கப்படும், அதேப்போல் விழாவில் உரையாற்ற வேண்டும் என்று கூறினேன்.

அண்ணாமலைக்கு நல்ல உள்ளம்
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தன்னிடம் எந்த பதிலும் கூறாமல் சட்டப்பேரவை செயலாளரை தொடர்பு கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பம் இல்லை என தெரிவித்ததாக கூறினார். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை படத்திறப்பு விழாவில் கலந்துக்கொண்டிருக்கிறார். அவரது நல்ல உள்ளத்தை பாராட்டுகிறேன்

கர்நாடக அரசு
மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற கருத்தை ஏற்கமாட்டோம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுவது ஏற்புடையது அல்ல. முதல்வராக புதியதாக பொறுப்பேற்று இருப்பதால் அவ்வாறு அவர் பேசி இருக்கலாம் . கர்நாடக அரசு காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்காமல் நடந்து வருகிறது.

ஸ்டாலின் வெற்றி
கொரோனா ஒழிப்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சற்று வெற்றி அடைத்திருக்கிறார் தொடர் வெற்றி பெற்றதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார். தமிழகம் கேரளா இடையேயான நதிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக முதல் கட்டமாக நீர்ப்பாசனத் துறை செயலாளர் கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். அதன் பின்னர் தான் நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளேன்" இவ்வாறு நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.












Click it and Unblock the Notifications