தமிழகத்தில் மாற்றம்! துளி அல்ல பெரும் அலை! பிரதமர் மோடி வரவேற்பால் பாஜக பொதுச்செயலாளர் நம்பிக்கை
சென்னை: ‛‛சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி உணர்ச்சி அலையில் வரவேற்ற மக்கள் மத்தியில் பயணம் செய்தார். மாற்றம் வரும்போது அது துளியாக இருக்காது. மாறாக அலையாக இருக்கும்'' என படங்களை பகிர்ந்து பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் பெருமையாக கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு திட்ட பணிகளை துவங்கி வைத்தார்.
தமிழகத்தில் பணிகள் முடிந்த திட்டங்களை துவங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். இந்த திட்ட பணிகளின் மொத்த மதிப்பீடு ரூ.31,400 கோடியாகும்.

ஒரேமேடையில் மோடி - ஸ்டாலின்
இந்த விழாவில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றனர். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு விமானத்தில் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு வந்தார். அங்கிருந்து காரில் சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கத்தை சென்றடைந்தார். அவரது கார் நேப்பியர் பாலம், சிவானந்தா சாலை, பெரியார் சிலை சந்திப்பு, பல்லவன் சாலை, சென்ட்ரல் ரெயில் நிலையம் எதிரில் உள்ள பாலத்தின் வழியாக சென்று பூந்தமல்லி நெடுஞ்சாலை, பெரியமேடு வழியாக நேரு உள் விளையாட்டு அரங்கை அடைந்தது.

பிரதமருக்கு உற்சாக வரவேற்பு
பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக தொண்டர்கள் சாலையோரம் நின்று கைகளை அசைத்தும், மோடி வாழ்க கோஷமிட்டும் வரவேற்றனர். நீண்ட தூரத்துக்கு தொண்டர்கள் அணிவகுத்து வரவேற்றதால் பிரதமர் நரேந்திர மோடி கார் கதவை திறந்து கைகளை அசைத்து உற்சாகத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் கொடுத்த வரவேற்பு தொடர்பான படங்களை பதிவிட்டு பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மாற்றம் துளியாக அல்ல... அலையாக..
தற்போது பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், ‛‛எண்ணிக்கை எப்போதும் சிறப்பு வாய்ந்தது தான். ஆனால் உணர்வுகள் சில நேரம் அதிகமானதாகிவிடும். இன்று(அதாவது நேற்று) அப்படி ஒரு நாள். பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் உணர்ச்சி அலையில் வரவேற்ற மக்கள் மத்தியில் பயணம் செய்தார். மாற்றம் வரும்போது அது துளியாக இருக்காது. மாறாக அலையாக இருக்கும்'' என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் பாஜக மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும், அது துளியாக அல்ல. அலையாக இருக்கும் எனவும் பிஎல் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அமித்ஷா
முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛தமிழகம் பிரதமர் நரேந்திர மோடியை விரும்புகிறது. பிரதமர் மோடி மீது அன்பும், பாசமும் தமிழகத்தில் பெருகி வருகிறது'' என குறிப்பிட்டு்ளளார். இதேபோல் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடிரவி உள்பட ஏராளமான தலைவர்கள் தமிழகத்தில் பிரதமர் மோடியை வரவேற்ற படங்களை பகிர்ந்து தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications