என்னதான் லாக்டவுனை தளர்த்தினாலும் அத்தியாவசியப் பொருட்களைதான் வாங்குறாங்க... வர்த்தக உலகம் ஷாக்!
சென்னை: கொரோனாவை தடுக்க அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் கட்டுப்பாடுகளை பெருமளவு அரசு தளர்த்தி இருந்தபோதும் வர்த்தகத் துறையில் மிகப் பெரியதொரு முடக்க நிலையை பொதுவாக காணமுடிகிறது. பொதுமக்களைப் பொறுத்தவரை அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே கடைகள், நிறுவனங்களுக்கு செல்கிற போக்கு அதிகரித்திருப்பது வர்த்தக துறையை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
கொரோனா கால லாக்டவுன் என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் வாழ்வியல் போக்கை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறது. எந்த கடைகளுமே திறக்காமலேயே கூட அன்றாட வாழ்க்கையை வாழ முடியும் என்கிற ஒரு உச்சகட்ட நிலைக்கும் கொண்டு சென்றது லாக்டவுன்.

மாறிய வாழ்கை
சில மணிநேரங்கள் கடைகள் திறந்தாலே போதும்...அதை வைத்தே அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொண்டு வாழ்க்கையை நகர்த்த முடியும் என்கிற படிப்பினையும் கொடுத்தது லாக்டவுன். இதற்கு பின்னர் அதிகபட்சம் இரவு 8 மணிவரைதான்.. இனி கடைகள் திறந்திருக்காது என்ற முடிவுடன் வாழ்க்கையை எதிர்கொள்கிற போக்கு இப்போது நம்முள் ஒன்றாகிவிட்டது.

லாக்டவுனுக்கு முந்தைய நிலைமை
லாக்டவுனுக்கு முந்தைய கால கட்டத்தில் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதை காண முடியும். சாலையோர கடைகள் முதல் பெருநிறுவனங்கள் வரை மாலைநேரங்களில் மக்களின் ஷாப்பிங் மோகம் களைகட்டும். மாதத்தின் முதல் வாரம்தான் என்றில்லை. தொடர்ந்து இதே நிலையை பல நிறுவனங்கள், கடைகளில் காண முடியும். மாத கடைசியில் ஒருவித தேக்கம் அல்லது மந்தநிலையையும் மெல்ல உணரவும் முடியும்;

அத்தியாவசியத்துக்கு பர்சேஸ்
இப்போது ஒவ்வொரு மாதத்தின் கடைசிவார நிலைமையைவிட படுமோசமாக இருக்கிறது சூழ்நிலை. அவசியம் என்றால்தான் துணி கடைகளுக்குப் போவதும் நகை கடைகளுக்குப் போவதும் என்பதான நிலை இருக்கிறது. அதுவும் அண்மையில் ஒட்டுமொத்தமாகவே லாக்டவுன் கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியது. இதன்பின்னரும் கூட நிலைமை சீராகவில்லை.

இதர பொருட்கள் விற்பனை சரிவு
ஷாப்பிங் மால்களில் அத்தியாவசியப் பொருட்கள் தவிர இதர பொருட்களின் விற்பனை 60% வரை சரிவை சந்தித்திருக்கிறது. இதனால் ஸ்டாக்குகளை வாங்கி வைப்பதை தவிர்க்கிறார்கள். ஸ்டாக்குகளை வாங்க மறுப்பதன் மூலம் இந்த வர்த்தக சங்கிலித் தொடரின் ஒவ்வொரு கன்னியும் அறுபட்டுப் போவதுடன் ஒவ்வொரு பிரிவினரும் நட்டத்தையும் பெரும் இழப்பையும் எதிர்கொண்டும் வருகின்றனர். இது ஒட்டுமொத்தமாக பொருளாதாரத்தில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சமூக வாழ்வில் பதற்றம்
லாக்டவுனுக்கு முந்தைய காலத்தில் கையில் பணப்புழக்கம் இருந்தது. இப்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கை காலத்தைவிட மிக மோசமாக எதிர்காலம் குறித்த ஒருவித நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. இதனால் அன்றாட வாழ்வில் மட்டுமல்ல செலவினங்களிலும் ஒருவித பதற்றம் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த பரவலான தாக்கத்தால் பல நிறுவனங்கள், கடைகளை மூடுகிற நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இயல்பு நிலைமை திரும்பும்வரை தாக்குப் பிடிக்க முடியும் என்கிற நம்பிக்கையில் ஓட்டுகிற நிறுவனங்களும் கடைகளும் இயங்குகின்றன. இதுதான் தற்போதைய இந்திய வர்த்தக உலகின் யதார்த்த நிலவரம்.












Click it and Unblock the Notifications