மாணவரணியை பலப்படுத்தும் திமுக.. கல்லூரி மாணவர்கள் பொறுப்புக்கு வரலாம்! நிர்வாகிகளுக்கு இன்டர்வியூ!
சென்னை : திமுக மாணவர் அணி நிர்வாகிகள் பதவிக்கு வர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்களிடம் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் முன்னிலையில் நேர்காணல் நடத்தி நியமிக்கப்படுவார்கள் என்று மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் அறிவித்துள்ளார்.
மாவட்ட, மாநகர அமைப்பில் பொறுப்பைப் பெற பட்டம் அல்லது பட்டயப் படிப்பை முடித்திருக்க வேண்டும், நகர, ஒன்றிய, பேரூர், பகுதி பொறுப்புகளுக்கு, தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், திமுக மாணவரணியின் மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை தொடங்கியுள்ளது.
திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தலைவர் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, கழக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, நகர, பகுதி, ஒன்றிய, பேரூர், வட்ட, பாகம் வரையிலான நிர்வாக கட்டமைப்பு கீழ்காணும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.

மாவட்ட அமைப்பு
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அமைப்பாளர், ஐந்து துணை அமைப்பாளர்கள் என்று நியமிக்கப்பட உள்ளனர். அதில், பெண் துணை அமைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். பொறுப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் 40 வயதிற்குட்பட்டவர்களாய் இருக்க வேண்டும். அவர்கள் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும். (ஏதாவது பட்டப் படிப்பு (அ) பட்டயப் படிப்பு)

மாநகர அமைப்பு
மாநகர அமைப்பில் ஒரு அமைப்பாளர், ஐந்து துணை அமைப்பாளர்கள் என்று நியமிக்கப்பட உள்ளனர். அதில், பெண் துணை அமைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். பொறுப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் 35 வயதிற்குட்பட்டவர்களாய் இருக்க வேண்டும். அவர்கள் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும். (ஏதாவது பட்டப் படிப்பு (அ) பட்டயப் படிப்பு)

நகர, பகுதி, ஒன்றிய, பேரூர் அமைப்பு
ஒரு அமைப்பாளர், ஐந்து துணை அமைப்பாளர்கள் என்று நியமிக்கப்பட உள்ளனர். அதில், பெண் துணை அமைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். பொறுப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதிற்குட்பட்டவர்களாய் இருக்க வேண்டும். அவர்கள் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது தற்போது கல்லூரியில் பயிலக்கூடிய மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். (ஏதாவது பட்டப் படிப்பு (அ) பட்டயப் படிப்பு)

வட்ட, பாக அமைப்பு
ஒரு அமைப்பாளர், மூன்று துணை அமைப்பாளர்கள் என்று நியமிக்கப்பட உள்ளனர். அதில், பெண் துணை அமைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். பொறுப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் 25 வயதிற்குட்பட்டவர்களாய் இருக்க வேண்டும்.,அவர்கள் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது தற்போது கல்லூரியில் பயிலுக்கூடிய மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். (ஏதாவது பட்டப் படிப்பு (அ) பட்டயப் படிப்பு)

நேர்காணல் நடத்தப்படும்
மாவட்ட, மாநகர மாணவர் அணி பொறுப்பிற்கு விண்ணப்பித்தவர்களிடம், அந்தந்த மாவட்டக் கழக செயலாளர் முன்னிலையில், மாணவர் அணிச் செயலாளர் மற்றும் மாநில மாணவர் அணி நிர்வாகிகள் நேர்காணல் நடத்தி, அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக அளவிலான மாணவர் அணி பொறுப்பிற்கு விண்ணப்பித்தவர்களிடம், அந்தந்த மாவட்டக் கழக செயலாளர் முன்னிலையில், மண்டல பொறுப்பேற்கும் மாநில நிர்வாகிகள் நேர்காணல் நடத்தி, அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

ஏற்பாடுகள்
கழகத்திலுள்ள 72 மாவட்டங்களும் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு, கழக மாணவர் அணியின் மாநில நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின், மாவட்டக் கழக செயலாளர்களுடன் உடனடியாக தொடர்பு கொண்டு, மாவட்ட, மாநகர அளவிலான அமைப்பாளர்-துணை அமைப்பாளர்களை நியமிப்பது தொடர்பாக, நேர்காணல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பொறுப்புக்கு வர விரும்பினால்
மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பொறுப்பிற்கு வர விரும்புகிறவர்கள், தலைமைக் கழக மாணவர் அணி வெளியிட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, அத்துடன் பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்பிற்கான சான்றிதழையும், வயதிற்கான சான்றிதழையும், அவர்கள் இதுவரையில் கழகப் பணியாற்றியிருக்கக்கூடிய விவரத்தினையும் இணைத்து, வரும் 17.12.2022 தேதிக்குள் மாவட்டக் கழக செயலாளரிடம் வழங்கிட வேண்டும்.

திமுக மாணவர் அணி
மனுவின் மற்றொரு நகலை, செயலாளர், தி.மு.க. மாணவர் அணி, "அண்ணா அறிவலாயம்", எண்.369, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 17 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் பூர்த்தி செய்த படிவம் மற்றும் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, "[email protected]" என்ற கழக மாணவர் அணியின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications