அந்த 6 பேர்.. அதில் 1 இப்பவே காலி.. பதவி பறிப்பு எப்போது? ரெண்டு விரலை காட்டும் எடப்பாடி பழனிசாமி!
சென்னை : ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக இருக்கும் 6 மாவட்ட செயலாளர்களின் பதவியைப் பறித்து தனது ஆதரவாளர்களுக்கு வழங்கத் தயாராகி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ள நிலையில், புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் உள்ளிட்டவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஓபிஎஸ் ஆதரவு மா.செக்களாக இருக்கும் 6 பேரின் பதவிகளும் விரைவில் பறிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

பொதுச் செயலாளரான ஈபிஎஸ்
அதிமுகவில் கடந்த ஒரு மாத காலமாக நிலவி வந்த கடுமையான மோதல்களுக்கு மத்தியில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவி, ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் வகித்து வந்த துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டுள்ளன.

ஓபிஎஸ் பதவிக்கு வேட்டு
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர் துணை பொதுச் செயலாளர்கள், தலைமை செயலாளர், அமைப்பு செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தனது ஆதரவாளர்களை நியமித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. தனக்கு நெருக்கமான பலருக்கும் முக்கிய பதவிகளை வழங்கியுள்ள நிலையில், அடுத்ததாக ஓபிஎஸ் வகித்து வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கும் வேட்டு வைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார் ஈபிஎஸ்.

இறுதி முடிவு
ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், சட்டப்பேரவை தலைவருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். அதில் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், அதிமுக சட்டமன்ற குழுவை மாற்றக் கூடாது. பொதுக்குழு சம்பந்தமாக நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் இருப்பதால் அவர்கள் கடிதம் அனுப்பினால் அதை நிராகரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதில் சபாநாயகர் அப்பாவு தான் இறுதி முடிவெடுப்பார்.

மாவட்ட செயலாளர்கள்
ஈபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளர் ஆகியுள்ள நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களாக உள்ள மற்றவர்களின் பதவிகளும் பறிக்கப்பட உள்ளன. அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் வைத்திலிங்கம், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக இருக்கும் எம்.ஜி.சுப்பிரமணியன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன், தேனி மாவட்ட செயலாளர் சையதுகான், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் மட்டுமே ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்.

5 பேர்
அதிலும் குறிப்பாக, ஓபிஎஸ்ஸுக்கு வலதுகரமாக நிற்கும் வைத்திலிங்கம் ஏற்கனவே அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் பதவியைப் பெற பலர் மறைமுகமாக எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டு வருகின்றனராம். ஆனாலும், வைத்திலிங்கத்தை தங்கள் பக்கம் ஈர்க்கும் முயற்சிகளில் ஈபிஎஸ் தரப்பு ஈடுபடுவதால் உடனடியாக எந்த மாற்றமும் நிகழவில்லை எனக் கூறப்படுகிறது.

அடிப்படை உறுப்பினர்?
முதல் கட்டமாக ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் 5 பேரின் மா.செ பதவியை மட்டும் பறிக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இவர்கள் உடனடியாக நீக்கப்பட மாட்டார்கள் என்றும், அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் தெரிகிறது.

2 வாய்ப்புகள்
அவர்களை தன் பக்கம் இழுத்து விடலாம் என எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறாராம். தங்கள் பக்கம் வந்துவிட்டால், மாவட்ட செயலாளர் பதவியில் நீடிக்கலாம். இல்லையென்றால், பதவி பறிக்கப்பட்டு ஓரங்கட்டப்படுவார்கள். ஓபிஎஸ் பக்கம் இருந்தால் எதிர்காலம் இல்லை என மூத்த மாஜிக்கள், அந்த மாவட்ட செயலாளர்களிடம் பேசி வருகின்றனராம்.
Recommended Video

ரேஸில் முக்கிய நிர்வாகிகள்
இதற்கிடையே, ஓபிஎஸ் ஆதரவாளர்களான மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருப்பதால் அவர்களது பதவி தங்களுக்கு வேண்டும் என அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் தலைமையை நோக்கி மும்முரமாக காய்நகர்த்தி வருகின்றனராம். இந்த 6 மாவட்டங்களிலும் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் பலர் இந்த ரேஸில் இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications