அன்புமணிக்கு புது போஸ்டிங்காமே?.. "அவர்"தான் தலைவரா.. அப்ப மணி?.. தைலாபுரத்தில் ஒரே பரபரப்பு
அன்புமணி ராமதாஸுக்கு புது போஸ்டிங் தர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
சென்னை: பாமகவில் சமீபகாலமாகவே புது புது மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.. அந்த வகையில், அன்புமணிக்கு புது போஸ்டிங் தரப்படுவதாகவும் செய்திகள் பரபரத்து வருகின்றன.
Recommended Video
பாமக தன்னை பலப்படுத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளது.. அதேசமயம், இன்றைய தமிழக அரசியலில், எதற்காக பாமகவுக்கு சறுக்கல் வந்துள்ளது? எதற்காக சொந்த தொகுதியில்கூட அன்புமணியால் வெற்றி பெற முடியாமல் போனது என்ற ஆராய்ச்சிக்குள் அக்கட்சி மேலிடம் நுழைந்து பார்க்க வேண்டிய நெருக்கடிக்கும் ஆளாகி உள்ளது.
கணிசமான வாக்கு வங்கி கையில் இருந்தாலும், ஒவ்வொரு தேர்தலிலும் அக்கட்சியின் முக்கியத்துவம் குறைந்து வருவதையும் சுயபரிசோதனை செய்து கொள்ள பார்க்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
ஏரியில் வீடு கட்டுவது 'திராவிட மாடல்’! எல்லோருக்கு வேலை 'பாட்டாளி மாடல்”.! விளக்கம் தரும் அன்புமணி!
கதறிய ராமதாஸ்
அதற்கேற்றார்போல், நடந்து வரும் பாமக கூட்டங்களில், தன்னுடைய வேதனையும், அதிருப்தியும் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளிப்படுத்தியே வருகிறார்.. உள்ளாட்சி தேர்தலில் கட்சியினரே துரோகம் செய்து விட்டனர், போட்டியிடுவதற்குக் கூட ஆட்கள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதே என்று மனம் நொந்தும் பேசி வருகிறார். எனவேதான், தான் உயிருடன் இருக்கும்போதே அன்புமணியை கோட்டையில் உட்கார வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை மீண்டும் கட்சிக்குள் டாக்டர் ராமதாஸ் ஆழமாக வேரூன்றி வருவதாக தெரிகிறது.
புது போஸ்டிங்
இதற்காக பாமகவை பலப்படுத்த ஒருசில மாற்றங்களை கையில் எடுக்கப்போவதாக சில மாதங்களுக்கு முன்பே தகவல்கள் வந்தன.. முக்கியமாக தலைவர் போஸ்டிங் தர போவதாகவும் கூறப்பட்டது.. பாமக தலைவராக ஜிகே மணி இப்போதைக்கு இருப்பதால், அவர் வகிக்கும் மாநில தலைவர் பதவி, இளைஞரணி தலைவரான அன்புமணிக்கு வழங்கப்படுமா அல்லது செயல் தலைவர் பதவி வழங்கப்படுமா என்பதுதான் அப்போதைய எதிர்பார்ப்பாக இருந்தது.
அன்புமணிக்கு போஸ்டிங்
ஆனால், எப்படியும் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும், அதில் முடிவாகும் என்றார்கள்.. 2019-லேயே அன்புமணிக்கு செயல்தலைவர் பதவி என்ற பேச்சு எழுந்தது.. என்ன காரணம் என்று தெரியவில்லை, அது அப்படியே அமுங்கிவிட்டது.. அன்புமணியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் இளைஞர்கள் அதிலும் குறிப்பாக அன்புமணி தலைமையில் ஆட்சி என்பதில் உறுதியாக இருப்பவர்களை கட்சியின் முக்கிய பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்..
வருகிறது அறிவிப்பு?
சமீபத்தில் கட்சியில் துணை பொதுச்செயலாளர் பதவி ஒழிக்கப்பட்டு, மாவட்ட செயலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது.. பிறகு, புதிய மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த லிஸ்ட்டும் வெளியிடப்பட்டது.. இந்த லிஸ்ட்டில் நிர்வாகிகள் அன்புமணியின் இளைஞர் அணியை சேர்ந்தவர்களாகவே நியமிக்கப்பட்டார்கள் என்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான், பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் பாமகவின் பொதுக்குழுக் கூட்டம் வரும் மே28ம் தேதி நடக்க போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது..
நாள் குறிச்சாச்சு
சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னையை அடுத்த திருவேற்காடு ஜிபிஎன் பேலஸ் திருமண அரங்கத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.. பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜிகே மணி தலைமையேற்கிறார். பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
ஜிகே மணி
2 நாளைக்கு முன்புதான், பாமக தலைவராக 25 ஆண்டுகளை பூர்த்தி செய்து முடித்த ஜிகே மணிக்கு அக்கட்சியின் சார்பில் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது... ஜி.கே.மணியின் உழைப்பை, அர்ப்பணிப்பை, தியாகத்தை, ராமதாஸும், அன்புமணியும் மாறி மாற புகழ்ந்தனர்.. 'என் அப்பாவுக்கு 2 மகன்கள், ஒருவர் ஜிகேமணி, இன்னொருவர் அன்புமணி.. நூறாண்டு காலம் ஐயா வாழ வேண்டும்' என்று உச்சக்கட்டமாக புகழ்ந்து வாழ்த்து கூறியிருந்தார்.
தைலாபுரம்
ஆனால் திடீரென பாமக சார்பில் எடுக்கப்பட்ட இந்த பாராட்டு விழாவுக்கு பின்னால் அந்த அரசியல் கணக்கு இருக்கிறதாம்.. தேர்தல்கள் அடுத்தடுத்து வர உள்ளநிலையில், தலைவர் பதவிக்கு அன்புமணியை நியமிக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கிறது.. அன்புமணிக்கு புது போஸ்டிங் என்பது நீண்ட காலமாகவே எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், தற்போது தைலாபுரத்தில் பரபரப்பு கூடி வருகிறது.. பார்ப்போம்..!