ரேஷனில் பாமாயிலுக்கு பதில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் வழங்குவது சாத்தியமா?
திருவண்ணாமலை: ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது கடலை எண்ணெய் வழங்க வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இது நடைமுறையில் சாத்தியமான ஒன்றா? அரசுக்கு என்ன செலவாகும்.. அதில் உள்ள சவால்கள் பற்றி பார்ப்போம்.
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நேற்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து அளிக்கப்பட்ட மனுவில், தென்னை, பனையில் இருந்து கள் இறக்கி விற்க விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழ்நாடு அரசு நீக்க வேண்டும். விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், கூட்டுறவு வங்கிகளிலும் பெற்ற அனைத்து பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்,

ஆடு மாடு பராமரிப்பு கடன்கள், நகை கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்... நீண்ட கால விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கடலை எண்ணெய், தேங்காய், நல்லெண்ணெய், உள்ளிட்டவற்றை மானிய விலையில் ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அது சாத்தியமா, அதில் உள்ள நடைமுறைசிக்கல்களை பார்ப்போம்.
நமது தாத்தா, பாட்டி காலத்தில் கடலை எண்ணெயும், நல்லெண்ணெயும் தான் சமையலில் பிரதானமாக இருந்து வந்தன. இன்று இதய நோய்கள் பெருகியதற்கு பாமாயில் ஒரு காரணம் என்ற கருத்து மக்களிடையே வலுவாக இருக்கிறது. இந்தச் சூழலில், திருவண்ணாமலை விவசாயிகள் வைத்துள்ள இந்தக் கோரிக்கை ஆரோக்கியமானது, ஆனால் அதன் பின்னால் உள்ள சவால்கள் மிகப் பெரியவை ஆகும்.
ரேஷனில் தேங்காய் , கடலை, நல்லெண்ணெய் நடைமுறையில் சாத்தியமா?
உண்மையைச் சொல்லப்போனால், இது "படிப்படியாகச் சாத்தியமே". ஆனால், நாளை காலையே எல்லா ரேஷன் கடைகளிலும் இதைச் செய்துவிட வாய்ப்பு இல்லை. ஏனெனில் நாம் இப்போது பயன்படுத்தும் பாமாயில் மலேசியா, இந்தோனேசியாவில் இருந்து கப்பல் கப்பலாக வருகிறது. அந்த அளவிற்கு நம் ஊரில் கடலை அல்லது எள் உற்பத்தி கிடையாது. அரசு விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து, செக்கு ஆலைகளை ஊக்கப்படுத்தினால், ஒரு 3 முதல் 5 ஆண்டுகளில் இந்த மாற்றத்தைக் கொண்டு வருவது சாத்தியம் தான்
அரசுக்கு என்ன செலவாகும்?
இங்குதான் "பட்ஜெட்" என்ற பெரிய மலை குறுக்கே வருகிறது. ஏனெனில் பாமாயில் விலை அரசுக்கு ஒரு லிட்டர் சுமார் ₹80 முதல் ₹90-க்குக் கிடைக்கிறது. அதை நமக்கு ₹25-க்குத் தருகிறார்கள். நல்லெண்ணெய்/கடலை எண்ணெய்: ஒரு லிட்டர் சுத்தமான எண்ணெய் எடுக்க அரசுக்கு எப்படியும் ₹200 முதல் ₹250 வரை செலவாகும்.
தமிழகத்தில் சுமார் 2.2 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. பாமாயிலுக்கு அரசு மாதம் சுமார் ₹150 கோடி செலவிடுகிறது என்றால், இதை நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெயாக மாற்றினால் அந்தச் செலவு மாதம் ₹500 - ₹600 கோடியாக எகிறும். அதாவது வருடத்திற்குச் சில ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் சுமையாக மாறிவிடும்.
இதில் உள்ள எதார்த்தமான சவால்கள்
பாமாயிலில் கலப்படம் செய்வது கடினம் (ஏனெனில் அது சுத்திகரிக்கப்பட்டு வருகிறது). ஆனால் கடலை எண்ணெய், நல்லெண்ணெய் அதிக விலை என்பதால், இடைத்தரகர்கள் கலப்படம் செய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது. அதைத் தடுப்பது அரசுக்குப் பெரிய சவாலாக முடிந்துவிடும். அதேபோல் பாமாயில் சீக்கிரம் கெட்டுப்போகாது. ஆனால் செக்கு எண்ணெய் சில மாதங்களில் அதன் சுவையை இழக்கத் தொடங்கும். இதைச் சரியாகப் பாதுகாத்து விநியோகிக்கும் கட்டமைப்பு நம் ரேஷன் கடைகளில் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டியதிருக்கும் பாமாயில் இறக்குமதி என்பது ஒரு பெரிய சர்வதேச வர்த்தகம். அதை நிறுத்துவது பல வணிக ரீதியான அழுத்தங்களை உருவாக்கும் நிலை ஏற்படலாம்.
விவசாயிகள் கோரிக்கை
விவசாயிகள் கோரிக்கை வைப்பது அவர்கள் லாபத்திற்கானது மட்டுமல்ல, நம் ஆரோக்கியத்திற்காகவும் தான். அரசு முழுமையாக இதைச் செய்ய முடியாவிட்டாலும், "பாமாயில் வேண்டுமா? அல்லது கடலை எண்ணெய் வேண்டுமா அல்லது தேங்காய் எண்ணெய் வேண்டுமா?" என்ற தேர்வை மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.. தேங்காய் அல்லது கடலை எண்ணெய் வேண்டுபவர்கள் கூடுதலாக ஒரு ₹50 அல்லது ₹70 கொடுக்க வேண்டியது வரும். எனினும் இந்த விவகாரத்தில் அரசின் முடிவினை பொறுத்தே எல்லாம் அமையும்.












Click it and Unblock the Notifications