நம்ப வச்சு ஏமாத்திட்டீங்களே.. ‘நரிக்குறவ பெண் அஸ்வினிக்கு இன்னும் கடன் கிடைக்கல’ - அண்ணாமலை காட்டம்!
சென்னை : "இப்படி நம்ப வைத்து ஏமாற்றுவது தான் உங்கள் சமூக நீதியா?" என நரிக்குறவப் பெண் அஸ்வினி பேசிய வீடியோவைப் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
Recommended Video
விளம்பரங்களில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் இந்த திமுக அரசு, தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை தேர்தலுக்குப் பின் கொடுக்கும் வாக்குறுதிகளையும் மறந்து விடுகிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார் அண்ணாமலை.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளியன்று, பூஞ்சேரி பழங்குடியினர் குடியிருப்புக்குச் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், நரிக்குறவர் இன மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கான ஆணைகளை வழங்கினார்.
ஆனால், இந்த ஆணைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை, தனக்கு கொடுத்த கடன் இன்னும் கிடைக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார் நரிக்குறவப் பெண் அஸ்வினி.

நரிக்குறவ இனப் பெண் அஸ்வினி
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோயிலில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தில் சாப்பிடச் சென்ற பூஞ்சேரி நரிக்குறவர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மக்கள், பந்தியில் அமரவிடாமல் கோயில் நிர்வாகத்தினரால் அவமதிக்கப்பட்டனர். இதனால் மனமுடைந்த நரிக்குறவப் பெண் அஸ்வினி என்பவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை இணைய ஊடகம் வாயிலாக தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளத்தில் பரவியது. நரிக்குறவப் பெண் அஸ்வினி பேசிய வீடியோ முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கும் சென்றது.

உடனடி நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து, அந்தக் கோவிலில் ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அஸ்வினி மற்றும் நரிக்குறவர் சமூகத்தினரை அழைத்து அன்னதானம் வழங்கி, அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டார். பின்னர் தீபாவளி அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள், வங்கிக் கடனுதவிகள் ஆகியவற்றை வழங்கினார். நரிக்குறவர் இனப் பெண் அஸ்வினிக்கும் கடனுதவி ஆணையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். திமுக அரசின் இந்த நடவடிக்கையை அப்போது பலரும் பாராட்டியிருந்தனர்.

அஸ்வினி வேதனை
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வழங்கிய கடன் உதவி தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என நரிக்குறவப் பெண் அஸ்வினி, தற்போது ஒரு தனியார் இணைய ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் வேதனையுடன் தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில், "எங்கள் பகுதிக்கு முதலமைச்சர் ஐயா வந்தார். 12 பேருக்கு தலா ஒரு லட்சம் கொடுத்தார். 30 பேருக்கு 10 ஆயிரம் கொடுத்தார். ஆனால் எதுவுமே நடக்கவில்லை, ஒரு லட்சம் லோன் யாருக்கும் கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. கடை இருந்தால் மட்டும் லோன் கொடுப்போம் என வங்கி மேனேஜர் கூறுகிறார்.

லோன் கிடைக்கவில்லை
எங்களிடம் எல்லா ஆதாரங்களும் இருந்தும் தர மறுக்கிறார்கள். இது தொடர்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசனை பார்த்தோம். அவர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரை பார்க்கச் சொன்னார். மாவட்ட ஆட்சியர் கடை கொடுக்கச் சொன்னார். விஏஓ வந்து பார்த்துவிட்டு, கடைகள் காலியாக இல்லையென கூறுகிறார்கள். கடைகள் காலியாக இருந்தாலும் தர மறுக்கிறார்கள். நம்பிக்கை முழுவதுமாக செத்துப்போச்சு" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை காட்டம்
அஸ்வினி பேசியுள்ள வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அண்ணாமலை, விளம்பரங்களில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் இந்த திமுக அரசு, தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை தேர்தலுக்குப் பின் கொடுக்கும் வாக்குறுதிகளையும் மறந்து விடுகிறார்கள். இப்படி நம்ப வைத்து ஏமாற்றுவது தான் உங்கள் சமூக நீதியா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications