இப்பவோ அப்பவோ.. எடப்பாடியின் கனவிற்கு வேட்டு வைத்த டீம்.. தேமுதிக + பாமக + பாஜகவா.. மொத்தமா போச்சே!
அதிமுக எங்கே 2024 தேர்தலுக்கு முன் தனித்து விடப்படுகிறது என்ற தார்மீக கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக என்ன மாதிரியான கூட்டணியை வைக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. சமீப நாட்களாக தமிழ்நாடு அரசியலில் நடந்து வரும் சம்பவங்களால் அதிமுகவால் பெரிய கூட்டணி அமைக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாட்டில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து இருந்தது. அதிமுக + பாஜக + பாமக + தேமுதிக இணைந்து லோக்சபா தேர்தலை சந்தித்தன. ஆனால் சட்டசபை தேர்தலின் போதே இந்த கூட்டணி உடைந்தது. தேமுதிக வெளியேறி அமமுகவுடன் கூட்டணி வைத்தது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணி மேலும் கரைந்தது. பாமக முதலில் கூட்டணியில் இருந்து வெளியேறியது. அதன்பின் நயினார் நாகேந்திரன் எடப்பாடி - ஓ பன்னீர்செல்வத்தை விமர்சனம் செய்ததால் பாஜக - அதிமுக கூட்டணியும் உடைந்தது.

கூட்டணி
இந்த நிலையில்தான் கடந்த வருடம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம். மெகா கூட்டணியாக இது இருக்கும். அதிமுக அழிந்துவிடும் என்று நினைப்பவர்களின் கனவு பலிக்காது. பல காலமாக இந்த இயக்கம் அழிந்துவிடும் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போய் இருக்கிறார்கள். அதுதான் இப்போதும் நடக்கும். தமிழ்நாட்டில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை நிலைநிறுத்துவோம். எங்கள் மீது வழக்குகளை போட்டு எங்களை முடக்க முடியாது. அதற்கு நாங்கள் விட மாட்டோம், என்று கூறினார். ரத்தத்தின் ரத்தங்கள் மெகா கூட்டணி என்றதும் நினைத்தது 2019 லோக்சபா கூட்டணிதான். அதோடு அமமுகவும் சேரும் என்றே அதிமுகவினர் பலரும் எதிர்பார்த்தனர்.

கூட்டணி சிக்கல்
ஆனால் கடந்த சில நாட்களாக தமிழ்நாடு அரசியலில் நடக்கும் விஷயங்களை பார்த்தால் மெகா கூட்டணி அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி அதிமுக இப்போது 5 பாகங்களாக உடைந்துவிட்டது. பலரும் இங்கே சத்தம்தான் போட்டு வருகிறார்கள். பாமகதான் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது. பாமக ஒரு அறிக்கை விட்டால் போதும் முதல்வர் ஸ்டாலின் அதை நிறைவேற்றி விடுகிறார் என்று வெளிப்படையாக திமுகவிற்கு ஆதரவாக கூறினார். இதனால் திமுகவோடு பாமக கூட்டணி வைக்கிறதோ என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதில் சொன்ன அன்புமணி, திமுகவோடு கூட்டணி இல்லை. அதிமுகவுடனும் கூட்டணி இல்லை. நாங்கள் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம், என்று கூறினார்.

திமுக அதிமுக
இன்னொரு பக்கம் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வரும் தேமுதிக பிரேமலதாவும், அதிமுக 4 ஆக பிரிந்துவிட்டது. நாங்கள்தான் எதிர்க்கட்சி போல செயல்பட்டு வருகிறோம் என்று கூறி உள்ளார். இது போக இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே அதிமுக - பாஜக இடையில் கடுமையான மோதல்கள் நிலவி வருகின்றன. அதிமுக பாஜக இடையிலான மோதல் அதிகரித்துள்ளதால் எங்கே இவர்கள் கூட்டணி முற்றாக முறிக்கிறதோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன. சமீபத்தில் பாஜக நிர்மல் குமார் உள்ளிட்ட பலர் அதிமுகவிற்கு தாவியதால் பாஜகவினர் கடுப்பில் உள்ளனர். அண்ணாமலை உள்ளிட்டோர் நேரடியாக அதிமுகவை விமர்சனம் செய்துள்ளனர்.

இப்பவோ அப்பவோ
அமர் பிரசாத் ரெட்டியும் வெளிப்படையாக தன் அதிருப்தியை அதிமுகவிற்கு எதிராக காட்டி உள்ளார். அதிமுகவினர் பாஜகவில் இணைந்த போது இனித்தது, பாஜகவினர் அதிமுகவில் இணையும்போது கசக்கிறதா? மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிரில் பாஜகவினர் நடந்து கொள்ள கூடாது என்று பாஜகவை பதிலுக்கு செல்லூர் ராஜுவும் விமர்சனம் செய்துள்ளார். இதனால் இவர்கள் கூட்டணியும் இப்பவோ அப்பவோ என்று உள்ளது, இதனால் எடப்பாடியின் மெகா கூட்டணி கனவே கலக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமமுக
அமமுக கண்டிப்பாக இந்த மெகா கூட்டணியில் இணைய வாய்ப்பே இல்லை. ஓபிஎஸ் மட்டுமே அமமுகவுடன் சேர்ந்தாலும் சேருவேன் என்று கூறி உள்ளார். அதனால் பாஜக - பாமக - தேமுதிக - ஓபிஎஸ் - அமமுக இணைந்து 3வது அணி அமைகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது. விசிகவும் திமுக கூட்டணியை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறிவிட்டது. அதனால் அதிமுக எங்கே 2024 தேர்தலுக்கு முன் தனித்து விடப்படுகிறது என்ற தார்மீக கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications