விக்டோரியா கௌரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியா? கொலிஜியத்தின் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரும் மமக!
விக்டோரியா கௌரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஜவாஹிருல்லா ஆட்சேபனை.
சென்னை: வழக்குரைஞர் விக்டோரியா கௌரியைச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைக்கும் கொலிஜியத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
யூடியூப் மற்றும் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய பிரச்சாரங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களை வழக்குரைஞர் விக்டோரியா கௌரி மேற்கொண்டிருந்ததாக அவர் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
முகாலய தோட்டம் பெயர் மாற்றம்! அப்பட்டமான மத அடிப்படைவாத செயல்! ஜவாஹிருல்லா சாடல்!
விக்டோரியா கௌரி
சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக உச்ச நீதிமன்ற கொலிஜியம் வழக்குரைஞர் விக்டோரியா கௌரியை ஜனவரி 17ஆம் தேதி பரிந்துரைத்துள்ளது. யூடியூப் மற்றும் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய பிரச்சாரங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களை வழக்குரைஞர் விக்டோரியா கௌரி மேற்கொண்டிருந்திருக்கிறார்.
மதமாற்றம் மற்றும் லவ் ஜிகாத்
மதமாற்றம் மற்றும் லவ் ஜிகாத் குறித்தும் வெறுப்பு பரப்புரை மேற்கொண்டுள்ள அவர் ரோமன் கத்தோலிக்கர்கள் மோசமான செயல்களில் ஈடுபடுவதாகவும் மேலும் கிறிஸ்தவ பாடல்களுக்குப் பரதநாட்டியம் நடத்தக்கூடாது என்றும் தொடர்ந்து வலியுறுத்திவந்திருக்கிறார். இவர் பேச்சுகளும் எழுத்துகளும் வகுப்புவாத மோதலை தூண்டக்கூடிய வகையில்அமைந்துள்ளதால் அவர் மீது கிரிமினல் வழக்குகளை பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாகவும் மூத்த வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
பிற்போக்குத்தனம்
கௌரியின் பிற்போக்குத்தனமான கருத்துக்கள் அடிப்படை அரசியலமைப்பு விழுமியங்களுக்கு முற்றிலும் எதிரானது. அவரது சித்தாந்த ரீதியிலான மத வெறிசிந்தனை ஆபத்தானது. இதன் அடிப்படையில் அவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு தகுதியற்றவர் என்று முன்னணி வழக்குரைஞர்கள் கருதுகின்றனர். அவர் நீதிபதியானால் அவரது சித்தாந்த நிலைப்பாட்டிற்கு எதிராக உள்ள யாருக்கும் அவரது நீதிமன்றத்தில் நீதியைப் பெற முடியுமா என்றும் முன்னணி வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்புவது நியாயமானது.
சிறுபான்மை சமூகம்
சிறுபான்மை சமூகத்தின் மீது இத்தகைய கடும் விரோத போக்கைக் கொண்டிருக்கும் ஒருவருக்கு கொலிஜியத்தின் பரிந்துரை கவலை அளிக்கிறது என்று மூத்த வழக்குரைஞர்கள் என் ஜி ஆர். பிரசாத், வைகை, வி. சுரேஷ் உள்ளிட்ட 21 வழக்குரைஞர்கள் உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் மூன்று முக்கிய நீதிபதிகளுக்கு தனித்தனியாக தங்கள் பரிந்துரைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
சட்டம் சரிசமமானது
அனைத்து மக்களுக்கும் சட்டம் சரிசமமானது என்பதை நிறுவ வேண்டிய பொறுப்பு இவரது நியமனம் வாயிலாகக் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே வழக்குரைஞர் விக்டோரியா கௌரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கான உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன்.