ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்... ஜவாஹிருல்லா வலியுறுத்தல்..!
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு தனது நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
ஆக்ஸிஜன் உற்பத்திக்கு தேவையான பணியாளர்களை தமிழக அரசு தனது பொதுத்துறை நிறுவனத்தின் மூலம் அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் பின்வருமாறு;
ஸ்டெர்லைட் ஆக்சிஜனை முழுவதும் மருத்துவப் பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாது - தமிழக அரசு
ஆக்சிஜன் பற்றாக்குறை
கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பல இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதைக் காரணம் காட்டி ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா நிறுவனம், ஆக்ஸிஜன் தயாரித்து மக்களுக்கு விநியோகிக்க அனுமதி அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
தூத்துக்குடி மக்கள்
அந்த மனு தொடர்பாக விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சியினர் உட்பட அனைவரின் கருத்தையும் கேட்க நடைபெற்ற கூட்டத்திலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி தரக்கூடாது என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அனைத்து கட்சி கூட்டம்
இந்நிலையில் இன்று நடைபெற்ற தமிழக முதலமைச்சர் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை வெறும் ஆக்சிஜன் பயன்பாட்டிற்கு மட்டும் தற்காலிகமாக திறக்கப்பட வேண்டும் என்றும் ஆக்சிஜன் தயாரிப்பு தவிர வேறு எந்த செயலிலும் ஸ்டெர்லைட் ஆலை ஈடுபடக்கூடாது என அனைத்து கட்சி கூட்டத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இதனடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்காக தற்காலிக உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஆக்ஸிஜன் உற்பத்தி
கொரோனா இரண்டாவது அலையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு ஆக்சிஜன் தேவை என்ற நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், தமிழக அரசு அதனை தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தேவையான ஆக்ஸிஜன் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.
விதிமீறல்களில் ஈடுபடும்
அரசின் விதிமுறைகளை தொடர்ந்து மீறி செயல்பட்டது ஸ்டெர்லைட் ஆலை என்பதை கவனத்தில் கொண்டு மீண்டும் அந்த ஆலை ஆக்சிஜின் உற்பத்தி என்ற பெயரில் விதிமீறல்களில் ஈடுபட்டு விடும் என்ற அச்சம் நிலவுவதால் தமிழக அரசே தனது நேரடி கட்டுப்பாட்டில் ஆக்சிஜின் தயாரிப்பு பணி நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
எனவே ஆக்ஸிஜன் உற்பத்திக்கு தேவையான பணியாளர்களை தமிழக அரசு தனது பொதுத்துறை நிறுவனத்தின் மூலம் அனுப்பி ஆக்ஸிஜனை உற்பத்திக்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.