புதுக்கோட்டை மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் கைது- மீட்க உடனடி நடவடிக்கை தேவை: கி.வீரமணி
தமிழ்நாட்டு மீனவர்கள் 16 பேரை இலங்கையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை தேவை என்கிறார் கி.வீரமணி.
சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 16 பேரை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 172 விசைப்படகுகளில் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று (11.3.2023) கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இதில் ஆரோக்கியராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அவரும், அசோக், கருப்பு, சக்தி உள்ளிட்ட 16 மீனவர்களும் இன்று (12.3.2023) அதிகாலை 4 மணியளவில் 30 நாட்டிகல் மைல் தொலைவில் அனலைத் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்த விசைப்படகுடன், 16 மீனவர்களையும் சுற்றி வளைத்துக் கைது செய்துள்ளனர். இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்த 16 மீனவர்களும் பருத்தித்துறை கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுவது மோசமான தொடர்கதையாக தொடர்ந்து கொண்டுள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களைக் காக்கக் கோரி, தமிழ்நாடு அரசு, தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது. அண்டை நாட்டுடனான உறவுகளைப் பேண வேண்டிய ஒன்றிய அரசு இப்பிரச்சினையைக் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக இருப்பதும், நீண்ட கால நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதும் கண்டிக்கத்தக்கதாகும்.
கடலூர், நாகப்பட்டினம் தொடங்கி தூத்துக்குடி வரை உள்ள மீனவர்கள் ஒவ்வொரு முறை கடலுக்குச் செல்லும் போதும் அச்சத்துடனையே தங்கள் தொழிலை நடத்த வேண்டிய அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காணவும், மீனவர்கள் உரிமையை மீட்டெடுக்கவும், அவர்களின் நலன்களை காக்கவும் வலியுறுத்தி, வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ஜெகதாப்பட்டினத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் மாநாடு நடத்தப்படவுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதி மீனவர்களும், அனைத்துக் கட்சிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்று, மீனவர் நலன் காக்க ஒருமித்த குரல் கொடுக்க முன்வருமாறு கடமை உணர்வுடன் அழைக்கின்றோம். செவிசாய்க்க மறுத்தால், போராட்டக் களம் காண வேண்டியது தவிர்க்க இயலாததாகிவிடும். இன்று கைது செய்யப்பட்டுள்ள கோட்டைப்பட்டினம் மீனவர்களின் விடுதலைக்கு உடனடியாக தமிழ்நாடு அரசு, இந்திய ஒன்றிய அரசினை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கவைக்க வேண்டுகிறோம். இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.

இதேபோல் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது அறிக்கையில், வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை அவர்களின் இரு விசைப்படகுகளுடன் சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனத் தெரிகிறது. மீனவர்கள் கைது கண்டிக்கத்தக்கது! தமிழ்நாட்டு மீனவர்கள் அவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் பகுதிகளில் மீன்பிடித்தால் கூட அவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்கின்றனர். இது தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மரபுவழியாக வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை பறிக்கும் செயலாகும். இதை அனுமதிக்கக் கூடாது! தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதாலும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாலும் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். ஒரு படகு பறிமுதல் செய்யப்பட்டால் குறைந்தது 20 குடும்பங்கள், அதாவது 100 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது! மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! என வலியுறுத்தி இருந்தார்.












Click it and Unblock the Notifications