தினகரன் ஒதுங்க வேண்டும்.. அதுதான் அவருக்கு நல்லது.. முதல்வரை சந்தித்த கலைச்செல்வன் வார்னிங்!
Recommended Video
சென்னை: தினகரன் ஒதுங்க வேண்டும். அதுதான் அவருக்கு நல்லது. முதல்வரின் ஆட்சி தொடர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் தெரிவித்தார்.
அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவினர் தினகரனை ஆதரித்து தனி அணியாக செயல்பட்டு வந்தனர். அவ்வாறு செயல்பட்டு வந்தவர்கள் திடீரென முதல்வருக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியதால் தற்போது 18 எம்எல்ஏக்களும் பதவிகளை இழந்து தவித்து வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழக சட்டசபை தேர்தலிலும் அமமுக வெற்றி பெற்று ஆர் கே நகரை போல் தினகரன் தனி முத்திரை பதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அதிமுக எம்எல்ஏக்களான அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர் தினகரன் ஆதரவாளர்களாக செயல்பட்டு அவர்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் கேட்கும் அளவுக்கு நடந்தது.
இரு தேர்தல்கள்
இதில் நீதிமன்றம் தலையிட்டு அந்த மூவரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என தடை விதித்தது. இந்த நிலையில் இரு தேர்தல்களிலும் டிடிவி தினகரனின் அமமுக தோல்வியையே சந்தித்தது. இதையடுத்து அமமுகவிலிருந்து ஒவ்வொருவராக வெளியேற தொடங்கிவிட்டனர். தங்கதமிழ்ச் செல்வனும் அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்டார்.
முதல்வரை சந்தித்த இசக்கி
அது போல் அமமுகவின் அமைப்பு செயலாளராக இருந்த இசக்கி சுப்பையா, அக்கட்சியிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவுக்கே சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று மாலை தினகரன் ஆதரவாளராக செயல்பட்டு வந்த அறந்தாங்கி எம்எல்ஏ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார்.
அதிமுக தொடர்ந்து
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் இனி இதுதான் உண்மையான அதிமுக. தொடர்ந்து அதிமுகவில் செயல்படுவேன். என்னை போல் மற்ற இரு எம்எல்ஏக்களான விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோரும் விரைவில் தாய் கழகத்துக்கு திரும்புவர் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
முதல்வர்
அவர் சொல்லி 24 மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்கு விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது. 3 அதிருப்தி எம்எல்ஏக்களில் இருவர் முதல்வரை சந்தித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
தினகரன் ஒதுங்க வேண்டும்
முதல்வரை சந்தித்தவுடன் கலைச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்து தினகரன் ஒதுங்கி கொள்ள வேண்டும். அதிமுக தலைமை மீது யாருக்கும் கோபம் இல்லை.
மக்களுக்கான திட்டம்
நாங்கள் இதுவரை அதிமுகவை விமர்சனம் செய்து பேசியதில்லை. அதிமுக ஆட்சி கலைய வேண்டும் என டிடிவி தினகரன் கூறியதை ஏற்க முடியாது. ஆட்சி கலைப்பு என்ற தினகரனின் பேச்சுக்கு யாரும் உடன்படமாட்டார்கள். மக்களுக்கான திட்டங்கள் எல்லாம் சென்று சேர்கின்றன.
முதல்வரை சந்தித்தது ஏன்?
நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டார்கள். உண்மையான தொண்டன் எப்படி திமுகவுக்கு செல்ல முடியும், தாய் கழகத்திற்குதான் செல்ல வேண்டும். தமிழகத்தில் ஜெயலலிதா அமைத்து கொடுத்த ஆட்சி தொடர வேண்டும் என்பதால் முதல்வரை சந்தித்தேன் என்றார் கலைச்செல்வன்.