ரஜினி.. நீங்க இப்போ பேச வேண்டியது எதை தெரியுமா? கார்த்தி சிதம்பரம் தடாலடி
சென்னை: ரஜினிகாந்த் தற்போது பற்றி எரிந்து கொண்டிருக்க கூடிய, குடியுரிமை சட்டத் திருத்தம், ஜம்மு காஷ்மீர் விவகாரம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை இவற்றைப் பற்றி தான் பேச வேண்டுமே தவிர, 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்தை பற்றி கிடையாது என்று காங்கிரஸ் கட்சியின் எம்பி, கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில், ராமர் மற்றும் சீதை உருவப் படங்கள் நிர்வாணமாக எடுத்து வரப்பட்டதாகவும், அவற்றை பெரியார் செருப்பால் அடித்ததாகவும் துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் பேசியிருந்தார்.
இதற்கு பெரியாரிய இயக்கங்கள், திராவிட இயக்கங்களும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ரஜினி மறுப்பு
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் தனது கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று ரஜினிகாந்த் நேற்று அளித்த பேட்டியில் கூறினார். இந்த விவகாரங்களுக்கு மத்தியில் தனது ட்விட்டர் பக்கத்தில் கார்த்தி சிதம்பரம் இது பற்றி கருத்து தெரிவித்து உள்ளார்.
|
கார்த்தி சிதம்பரம்
பெரியார் பற்றிய விவாதம் இப்போதைக்கு மிகவும் அவசியமானதா ரஜினிகாந்த்? ஒவ்வொரு வரலாற்று தலைவரும் பல்வேறு முரண்பாடுகள், சர்ச்சைகளை கொண்டிருப்பார்கள். காந்தியாக இருந்தாலும் வின்சென்ட் சர்ச்சில் ஆக இருந்தாலும் இதுதான் நிலைமை. ஒரு சில சம்பவங்களை வைத்து வரலாற்றையே புரட்டிப் போட்ட ஒருவரை மதிப்பிடுவது தவறானது.
|
பங்களிப்பு
பெரியார் தமிழகத்திற்கு செய்துள்ள பங்களிப்பு ஏராளம். ரஜினிகாந்த் அரசியலில் நுழைவதற்கு ஆர்வமாக இருக்கிறார். எனவே அவர் தற்போது, பற்றி எரியக் கூடிய விஷயங்களான குடியுரிமை சட்டத் திருத்தம், ஜவஹர்லால் நேரேு பல்கலைக்கழக தாக்குதல், காஷ்மீர் விவகாரங்கள் தொடர்பாக விவாதத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவும் கடுப்பு
அதிமுகவின் பெரும்பாலான தலைவர்களும் கூட ரஜினிகாந்த் தேவையில்லாமல் இப்போது இவற்றை பேசுவதாக கூறியுள்ளனர். அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், ரஜினிகாந்த் வாயை மூடி மவுனமாக இருக்க வேண்டும் என காட்டமாக கூறினார். துணை முதல்வர் ஓபிஎஸ், தன்னை போன்றோர் உயர் இடத்திற்கு வர பெரியார் பங்களிப்பு முக்கியமானது என்றார்.