"அக்னி நட்சத்திரம்.. தமிழகம் முழுதும் இன்று ஆரம்பம் "கத்திரி".. 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்
இன்று துவங்குகிறது கத்திரி வெயில் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் உள்ளனர்
சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில், அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் இன்று முதல் தொடங்குகிறது... இந்த கத்தரி 28ந்தேதி வரை நீடிக்க உள்ள நிலையில், 24ந்தேதி வரை அனல் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது.. கடந்த மார்ச் மாதமே வெயில் மண்டையை பிளக்க ஆரம்பித்து விட்டது..
அப்போதே இந்த மே மாசம் எப்படி இருக்க போகிறதோ என்ற அச்சம் தமிழக மக்களை சூழ்ந்து கொண்டுவிட்டது.. அதற்கேற்றார்போல், ஏராளமான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி செல்ல ஆரம்பித்துவிட்டது.
நாளை தொடங்கும் கத்தரி வெயில்.. இன்றே 10 இடங்களில் சதமடித்த வெயில்.. சென்னை நிலை என்ன தெரியுமா
வேலூர்
நேற்றுகூட 9 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது... குறிப்பாக, வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 105.4 வெப்பநிலை பதிவாகியுள்ளது... இதைதவிர, மதுரை, நெல்லை, ஈரோடு, திருச்சி, கரூர், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர் மாவட்டங்களிலும் வெயில் சதமடித்துள்ளது... இதில், வேலூர் மாவட்டத்தில் பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என கலெக்டர் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார்...
அக்னிநட்சத்திரம்
அவசியம் ஏற்பட்டால் குடிநீர், குடை, தொப்பி உள்ளிட்ட முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும் அவர் அட்வைஸ் தந்துள்ளார்... இப்படிப்பட்ட சூழலில்தான், பெரிதும் கலக்கத்தை ஏற்படுத்தி வந்த அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது.. இந்த கத்திரி 28ந்தேதி வரை நீடிக்க உள்ள நிலையில், 24ந்தேதி வரை அனல் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது... அதனால் இன்றும் இயல்பான அளவை விட 5 டிகிரி வரை வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளநீர், மோர்
இன்று மட்டும் என்றில்லாமல், அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில் வெயிலின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... இதன் காரணமாக பகல் நேரத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களை தவிர வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் வெப்பத்தை தணிக்க இளநீர், மோர் உள்ளிட்ட இயற்கை பானங்களை அருந்துவது நல்லது என்றும் டாக்டர்கள் அட்வைஸ் தந்து வருகிறார்கள்.
ஒருவர் உயிரிழப்பு
இதனிடையே, தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.. அந்த வகையில், நேற்று கோவை சூலூர், உக்கடம், ஆத்துப்பாலம், குனியமுத்தூர், இராமநாதபுரம், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.. தருமபுரி மாவட்டம் ஜக்கம்பட்டி கிராமத்திலும் பலத்த மழை பெய்தது.. இதில், மின்கம்பி அறுந்து விழுந்ததில் முனியப்பன் என்ற 50 வயது நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Recommended Video
கத்திரி வெயில்
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கினாலும், வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ஆறுதல் அளித்துள்ளது.. அதே சமயம் கத்திரியை எதிர்கொள்ள தமிழக மக்கள் தயாராகியும் வருகிறார்கள்.