7 ஆண்டுகள் வேண்டாம்.. 4 ஆண்டுகளாக மாற்றுங்கள்! கொங்கு ஈஸ்வரன் முதலமைச்சருக்கு முக்கியக் கோரிக்கை!
சென்னை: விவசாயிகளுக்கு 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் சொட்டு நீர் பாசன திட்ட சலுகையை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக அரசின் சொட்டு நீர் பாசனம் அமைத்து கொடுக்கும் திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகள் 100 சதவீத மானியத்திலும் மற்ற விவசாயிகள் 75 சதவீத மானியத்திலும் பயன் பெறுவது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ஈஸ்வரன் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

சொட்டுநீர்ப்பாசனம்
சொட்டுநீர்ப்பாசனம் அமைத்து பாசன சாகுபடிப் பரப்பினை அதிகரிக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 2022-23 ஆம் ஆண்டில், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில், 960 கோடி ரூபாய் ஒன்றிய மற்றும் மாநில நிதியில் சொட்டுநீர்ப்பாசன திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23-ல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பராமரிப்பு பொறுப்பு
இதன் மூலம் சிறு குறு விவசாயிகள் 100 சதவீத மானியத்திலும் மற்ற விவசாயிகள் 75 சதவீத மானியத்திலும் பயன் பெறுகின்றனர். இந்த திட்டத்தில் சிறு குறு விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைத்த பின்னர் மூன்று வருடங்களுக்கு பராமரிப்பு பணிகள் அந்த வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் நிறுவனமே செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறு பராமரிப்பு செய்யும் பொழுது பொருள்களுக்கு ஆகும் செலவு விவசாயியை சார்ந்தது. அதே சமயம் பராமரிப்பு செய்வதற்கு ஆள் கூலி அந்த நிறுவனமே இலவசமாக செய்து கொடுக்கிறது.

விவசாயிகள்
இந்த நிலையில் விவசாய நிலத்தில் இருக்கும் எலி போன்ற உயிரினங்கள் சொட்டு நீர் குழாய்களை கடித்து சேதப்படுத்தும் போது அதில் ஏற்படும் தண்ணீர் சேதம் மற்றும் குறிப்பிட்ட அழுத்தத்தில் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் உப்பு நீர் காரணமாக தண்ணீர் செல்லும் குழாய்கள் அடைப்பு ஏற்பட்டாலும் சரியாக தண்ணீர் பாய்ச்ச முடியாமலும் மீண்டும் அதை சரி செய்வதற்கும் ஆகும் பராமரிப்பு செலவும் விவசாயிகளுக்கு மிகபாரமாக அமைகிறது.

ஈஸ்வரன் கோரிக்கை
ஏழு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே விவசாயிகள் இந்த திட்டத்தை இலவசமாகவோ அல்லது கட்டணம் செலுத்தியோ விவசாயிகளின் தகுதிக்கு தகுந்தாற்போல பெற கூடிய தற்போதைய நிலையை விவசாயிகளுக்கு ஏற்படும் பராமரிப்பு செலவு மற்றும் சொட்டுநீர் பாசன குழாய்களின் ஆயுள் காலத்தையும் கருத்தில் கொண்டு ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை கொடுக்கும் இந்த சொட்டு நீர் பாசன திட்டத்தை நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கொடுத்து விவசாயிகளுக்கு ஏற்படும் இன்னல்களை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாகவும் விவசாயிகள் சார்பாகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications