பேச வேண்டிய இடத்தில் பேசியிருக்கிறார்; அது தான் அப்பாவு; கொங்கு ஈஸ்வரன் பாராட்ட இது தான் காரணம்!
சென்னை: ஆளுநர்களுக்கான காலக்கெடு குறித்து பேச வேண்டிய இடத்தில் பேசியிருப்பதாக சபாநாயகர் அப்பாவுவுவை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு.. அப்பீலுக்கு போக வேண்டாம்.. ஸ்டாலினுக்கு கருணாஸ் கடிதம்
சட்டப்பேரவை தலைவர்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சிம்லா மாநாட்டில் பேசிய பேச்சு எதார்த்தத்தை ஒலித்திருக்கிறது. கடந்த காலங்களில் சட்டப்பேரவைகள் நடந்த முறைகளையும் அதற்கு இருந்த மரியாதைகளையும் தற்போது சில மாநிலங்களில் நடக்கின்ற நடைமுறைகளையும் ஒப்பிட்டு எதார்த்தத்தை எடுத்து கூறியிருக்கின்றார். பல மாநிலங்களில் சட்டப்பேரவை நடைமுறை ஆட்சிகளில் இருப்பவர்கள் சர்வாதிகாரத்தோடு நடப்பதையும் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.
விவாதங்கள்
விவாதங்களே நடக்காமல் நிறைவேற்றப்படுகின்ற சட்ட முன் வடிவங்களையும் குறிப்பிட்டு சொல்லி இருக்கின்றார். குறைவான நேரம் இருப்பதால் சட்டப்பேரவைத் தலைவர்கள் எப்படிப்பட்ட சங்கடத்தை சந்திக்க வேண்டி இருக்கின்றது என்ற கள நிலவரத்தையும் எடுத்துச் சொல்லி இருக்கின்றார். எல்லாவற்றிற்கும் மேலாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படுகின்ற சில தீர்மானங்கள் அந்த மாநில ஆளுநருக்கு அனுப்பப்பட்டு மாதக்கணக்கில், வருடக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டு இருப்பதையும் குறிப்பிட்டிருக்கின்றார்.
புரட்சிக்கர யோசனை
சட்டப்பேரவை தீர்மானங்கள் ஆளுநருக்கு அனுப்பப்படும் போது குறிப்பிட்ட கால கெடுவுக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமென்ற கண்டிப்பான, புரட்சிகரமான யோசனைகளையும் தெரிவித்திருக்கின்றார். இந்த கருத்து இந்தியாவில் அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. அனைவரும் பேசும் பொருளாகவும் மாறியிருக்கின்றது. தமிழன் என்றால் தலை நிமிர்ந்து தைரியமாக பேசக் கூடியவன் என்பதை நம்முடைய சட்டப்பேரவைத் தலைவர் மாநாட்டிலே நிரூபித்திருக்கிறார்.
தமிழக பெருமை
இன்றைய காலகட்டத்திற்கு தேவையான கருத்துக்களை பேச வேண்டிய இடத்தில் தெளிவாக பேசி இருக்கிறார். அவர் பேசியதை நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியாவில் ஆளுநர் நடைமுறைகளில் மிகப்பெரிய மாற்றத்திற்கான விதை ஊன்றியதாக பார்க்கப்படும். தமிழகத்தின் பெருமைகளை சிம்லாவில் முத்திரை பதித்து வந்திருக்கின்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவர்களை நெஞ்சார பாராட்டுகிறோம்.