'கண்கள் இருந்தால் கண்ணீர் வரும்' - திமுகவை கடைசி வரை விட்டுக் கொடுக்காத கே.எஸ்.அழகிரி
சென்னை: கண்கள் இருந்தால் கண்ணீர் வரத் தான் செய்யும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னமும் இழுபறி நிலையில் தான் உள்ளது. சில நாட்களுக்கு முன், தொகுதிப் பங்கீடு குறித்த கேள்விக்கு, செய்தியாளர்களையே ஜாலியாக கலாய்த்த கே.எஸ்.அழகிரி, நேற்று (மார்ச்.5) கண்ணீரே விட்டுவிட்டார்.
காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, "திமுகவினர் நம்மை மதிக்கவில்லை. அவர்கள் சொல்லும் எண்ணிக்கைக்கு நாம் சம்மதித்தால் நாளை காங்கிரஸ் கட்சியே இருக்காது" என்று பேசிய அழகிரி ஒரு கட்டத்தில் தேம்பி அழுது கண்ணீர் விட்டார்.
இந்நிலையில் இன்று சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, "திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இன்று, நாளை வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறும். இந்த நேர்காணலுக்குப் பின் திமுகவுடன் மீண்டும் பேசுவோம்" என்றார். மேலும், நேற்று அழுதுகொண்டே உரையாற்றியது குறித்து கேட்டபோது, "கண்கள் இருந்தால் கண்ணீர் வரத்தான் செய்யும்" என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
இதற்கிடையே, எங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால், அந்த கட்சிக்கு நல்லது என்று மக்கள் நீதி மய்யம் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளது. எனினும், டெல்லி மேலிடத்தில் இருந்து வரும் உத்தரவுகளைப் பொருத்தே தமிழக காங்கிரஸ் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கையை முடிவு செய்யவுள்ளது.