விருதுக்காக பிரியாணி விருந்து... குன்றத்தூர் தாசில்தார்... பணியிட மாற்றம்!!
குன்றத்தூர்: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை திறமையாக கையாண்ட வகையில் குன்றத்தூர் தாசில்தார் எஸ். ஜெயச்சித்ரா சுதந்திரதினத்தன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் கவுரவிக்கப்பட்டார். இதையடுத்து பிரியாணி கொடுத்து விருந்து வைத்த ஜெயச்சித்ரா பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கான சிறப்பு தாசில்தாராக பி. ஏகாம்பரத்திற்கு பதிலாக ஜெயச்சித்ரா நியமனம் பெற்றுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டக் கலெக்டர் பி. பொன்னையா 13 வருவாய் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து இருந்தார். அதில் இவரும் ஒருவர்.
குன்றத்தூர் தாசில்தார் ஆக இருப்பவர் எஸ். ஜெயச்சித்ரா. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் திறமையாக பணியாற்றினார் என்ற காரணத்திற்காக இவர் சுதந்திர தினத்தன்று முதல்வரின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தார். சுதந்திர தினத்தன்று ஜெயச்சித்ராவை முதல்வர் கவுரவித்தார்.
இதையடுத்து, செம்பரம்பாக்கம் அருகே இருக்கும் அரசு பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் வைத்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் விருந்து கொடுத்தார். இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பெரும்பாலும் விருந்தில் வருவாய்த்துறை அதிகாரிகள், தாசில்தார்கள், வருவாய்துறை இன்ஸ்பெக்டர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், உதவியாளர்கள், துணை தாசில்தார்கள், உதவி கலெக்டர்கள் கலந்து கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது.
எஸ்பிஐ ஏடிஎம்மில் சூப்பர் பாதுகாப்பு வசதி.. டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி?
வருவாய்துறை, பேரிடர் மேலாண்மை துறையைச் சேர்ந்த என மொத்தம் மூவருக்கு முதல்வர் விருது வழங்கப்பட்டது. கொரோனா காரணமாக கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. நான்கு பேர் ஓரிடத்தில் கூடக் கூடாது, மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும், தனி மனித இடைவெளி தேவை போன்ற விதிமுறைகளை இவர்கள் விருந்தின்போது பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதேபோல் கடந்த ஜூன் மாதம் திமுகவைச் சேர்ந்த ஒருவர் கும்மிடிபூண்டியில் 250 பேரை அழைத்து விருந்து வைத்து இருந்தார். இதன் மூலம் பலருக்கும் தொற்று பரவி இருந்தது. இவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், ஜெயச்சித்ரா மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை. காரணம் அவர் மீது எந்தவிதப் புகார்களும் வரவில்லை என்று குன்றத்தூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.