என்ன அலட்சியம்! சிபிஐ விசாரணைக்கு மாற்றிவிடுவோம்! போலி ஆவணத்துக்கு இழப்பீடு! சென்னை ஐகோர்ட் வார்னிங்
போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை: நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில், சிபிசிஐடி விசாரணை குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற நேரிடும் என எச்சரித்துள்ளது.
மத்திய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் பல்வேறு சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே போக்குவரத்தை உட்கட்டமைப்பை ஏற்படுத்த இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கத் தனி நபர்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்படும். அப்படிக் கையகப்படுத்தும் நிலத்திற்கு மார்கெட் விலைக்கு ஏற்ப இழப்பீட்டையும் அரசு வழங்கும்.
குடிக்கும் நீரில்.. சிக்காது டிமிக்கி கொடுக்கும் குற்றவாளிகள்! வீடுவீடாக சல்லடை போடும் சிபிசிஐடி!
போலி ஆவணங்கள்
இருப்பினும், சில இடங்களில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து சிலர் இழப்பீடுகளைப் பெறுவதாகப் புகார் உள்ளன. அது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் இப்போது அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. சிபிசிஐடி இந்த வழக்கைக் கையாண்ட விதத்திற்கும் கடும் அதிருப்தியும் தெரிவித்துள்ளது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காகக் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டன.
வழக்கு
இந்த நிலங்களுக்குப் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தவர்களுக்கு 20 கோடியே 52 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இரு வழக்குகளைப் பதிவு செய்து, 15 பேரை கைது செய்துள்ளனர். புலன் விசாரணை நடந்து வருகிறது.
முன்னேற்றம் இல்லை
இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சிபிசிஐடி காஞ்சிபுரம் சரக டிஎஸ்பி எம்.வேல்முருகன் அறிக்கை தாக்கல் செய்தார். ஏற்கனவே தாக்கல் செய்த அறிக்கையையே மீண்டும் தாக்கல் செய்துள்ளதாகவும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
நீதிபதி கண்டனம்
மேலும், இந்த விவகாரத்தில் காஞ்சிபுரம் மாவட்ட அப்போதைய வருவாய் அதிகாரி நர்மதா, இந்த வழக்கு விசாரணைக்கு மூன்று முறை ஆஜராகியுள்ள நிலையில், அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை என்று கூறியுள்ளதன் மூலம், சிபிசிஐடி அதிகாரிகள் எவ்வளவு மந்தமான முறையில் செயல்படுகிறார்கள் என்பது தெளிவாகிறது என நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிபிஐ-க்கு மாற்ற நேரிடும்
நத்தை வேகத்தில் செயல்பட்டால் வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற நீதிமன்றம் தயங்காது என எச்சரித்த நீதிபதி, சரியான திசையில் திறமையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு இறுதி வாய்ப்பாக ஒருவார காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டு, விசாரணையைப் பிப்ரவரி 13ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.