"கர்மா என்றால் என்ன தெரியுமா..!" தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி! ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: வழக்கு விசாரணை ஒன்றில் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கர்மா கொள்கைப்படி தீர்ப்பு அளித்த நிலையில், இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்து உள்ளது.
மதுரையில் காவலராக பணியாற்றி வருபவர் ஸ்ரீமுருகன். இவர் தனது மேலதரிகளின் உத்தரவைப் பின்பற்றுவதில்லை என்றும் அடிக்கடி அனுமதியின்றி விடுப்பு எடுப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவரை மதுரையில் இருந்து இடமாற்றம் செய்து மதுரை மாவட்ட காவல் துறை ஆணையர் உத்தரவிட்டார். அவரை தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. சிபிசிஐடி விசாரணை அதிகாரி நியமனம்.. யார் இந்த டிஜிபி ஷகீல் அக்தர்?
வழக்கு
பணியிட மாற்றத்துக்கு எதிராக ஸ்ரீமுருகன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில் கடந்த 2003 முதல் போலீசில் பணிபுரிந்து வருவதாகக் குறிப்பிட்டு உள்ள அவர், அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்து வந்த தன்னை தூத்துக்குடி மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்து தென் மண்டல போலீஸ் ஐ.ஜி உத்தரவிட்டுள்ளதாகவும் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் தனது மனுவில் கோரிக்கை விடுத்து இருந்தார்.
வாதம்
அந்த வழக்கை மதுரை கிளையில் தனி நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். அந்த விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கடந்த 18 மாதங்களில் மட்டும் மொத்தம் நான்கு முறை இடமாறுதல் உத்தரவுகளை எதிர்கொண்டேன்.. மற்ற இடமாறுதல்கள் தற்செயலானது என்றாலும் கூட தூத்துக்குடிக்கு இட மாறுதல் உள்நோக்கம் கொண்டது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைத்து இருந்தார்.
அரசு தரப்பு
இருப்பினும், அரசு சார்பில் ஆரஜான வழக்கறிஞர் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். மனுதாரர் உயரதிகாரிகளை மதிப்பதில்லை என்றும் பணிக் காலத்தில் மட்டும் அவருக்கு 18 முறை மெமோ வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பழிவாங்கும் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாகக் குறிப்பிட்ட வழக்கறிஞர், வழக்கை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தார். அதற்குத் தான் நீதிபதி கர்மா அடிப்படையில் தீர்ப்பு அளித்தார்.
கர்மா அடிப்படையில்
இந்த வழக்கில் மதுரை கிளை நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, "இந்த மனுதாரர் ஏற்கனவே போதுமான தண்டையை அனுபவித்துவிட்டார். அவர் மற்ற காவலர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவே சம்பளம் பெறுகிறார். எனவே, அவருக்கு கர்மா அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படுகிறது. கர்மாவின் கொள்கைகளில் சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா என இரு வகைகள் உள்ளன. அதில் பிராரப்த கர்மாவிற்கு மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது
தீர்ப்பு
பணியிடமாற்ற உத்தரவை ரத்து செய்கிறோம். அது மனுதாரருக்குப் பொருளாதார ரீதியாக துயரத்தையே தரும். இதன் காரணமாக மனுதாரர் இடமாறுதல் உத்தரவு ரத்து செய்கிறோம். அதற்குப் பதிலாக மதுரை மாவட்டத்திலேயே போக்குவரத்து பிரிவில் அவரை நியமிக்கலாம்" என்று ஐ.ஜி, போலீஸ் கமிஷனருக்கு நீதிபதி உத்தரவிட்டார். கர்மா அடிப்படையில் நீதிபதி உத்தரவிட்டது சர்ச்சையானது.
ரத்து
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், அரசு ஊழியராக பணிபுரிந்து வரும் ஒருவருக்கு நீதி அடிப்படையில் இல்லாமல் கர்மா அடிப்படையில் தீர்ப்பு வழங்க முடியாது என வாதிட்டார். இதைக் குறித்துக் கொண்ட நீதிபதி வேல்முருகன் அமர்வு, கர்மா அடிப்படையில் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.