சாதி சான்றிதழ் தாங்க சார்! சென்னையில் தீக்குளித்து போராடிய மலைக்குறவ இளைஞர்.. பரிதாபமாக பலி
சென்னை: சாதி சான்றிதழ் கோரி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த மலைக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சாதி சான்றிதழ் கோரி நீண்ட காலமாக அலைந்து வருவதாகவும், ஆனால் எங்குமே சாதி சான்றிதழ் கொடுக்கவில்லையென்றும் அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்யாண மண்டபமான பஸ் ஸ்டாப்! சிக்கிய கல்லூரி மாணவனுக்கு இறுகும் பிடி! இருவர் மீது பாய்ந்தது போக்சோ!
சாதி சான்றிதழ்
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிட, குறவர் ஆகிய சமூகங்களை சேர்ந்தவர்கள் சாதி சான்றிதழ் பெறுவதற்கு ஒரு பெரும் போராட்டத்தையே நடத்த வேண்டியுள்ளது. அதவும் குறவர் மற்றும் பழங்குடியின மக்கள் எனில் இவர்களுக்கு அவ்வளவு எளிதாக சான்றிதழ் கிடைத்துவிடுவதில்லை. பொதுவாக இவ்வாறு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களுக்குள் சான்றிதழ் அளிக்க வேண்டும். பழங்குடியின மக்களுக்கு சான்றிதழ் வழங்க 30 நாட்கள் ஆகும்.
தீக்குளிப்பு
இதுதான் அரசு சொல்லும் நடைமுறை. ஆனால், யதார்த்தத்தில் பழங்குடியின மக்கள் சான்றிதழ் பெறுவது என்பது கானல் நீராகவே இருந்து வருகிறது. அந்த வகையில் மலைக்குறவர் சமூகத்தை சேர்ந்த வேல்முருகன் எனும் நபர் தனது மகனின் சாதி சான்றிதழுக்காக வெகு நாட்களாக அலையவிடப்பட்டிருக்கிறார். இவ்வாறு இருக்கையில் நேற்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வந்த அவர் திடீரென உடலில் பெட்ரொல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
வாக்குமூலம்
அலறல் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த காவல்துறையினர், வேல்முருகனை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் வேல்முருகன் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையை சேர்ந்தவர் எனவும், தனது மகனின் சாதி சான்றிதழுக்காக நீண்ட நாட்கள் அலைந்து திரிந்ததாகவும், அதிகாரிகள் அலட்சியம் செய்ததன் காரணமாகவே இவ்வாறு தீக்குளித்ததாகவும் கூறியுள்ளார்.
உயிரிழப்பு
உடலில் 90 சதவிகித தீ காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாதி சான்றிதழ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுக்க வேண்டும் என்று அரசு வழிகாட்டுதல்கள் இருந்தபோதும் பழங்குடியினரும், குறவர் சமூக மக்களும் ஏன் இப்படி அலையவிடப்படுகின்றனர் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகின்றனர்.