மயிலாடுதுறை உதயம்.. ஒரே வருடத்தில் 6 மாவட்டங்களை உருவாக்கி அசத்திய எடப்பாடியார்!
சென்னை: தமிழகத்தின் 38வது மாவட்டமாக உதயமாகியுள்ளது மயிலாடுதுறை. தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறையை இன்று காணொலி காட்சி மூலம், துவக்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை பிரிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம், சட்டசபையில் முதல்வரால் வெளியானது. பிறகு, அரசாணை ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இதற்கான நிர்வாக பணிகளை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் இன்று துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறை சிறப்பு அதிகாரியாக லலிதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டிருந்தார். அவரே கலெக்டராக தொடர வாய்ப்பு உள்ளது.
புதிதாக மாவட்டங்கள்
தமிழகத்தில் முந்தைய ஆண்டு வரை, மொத்த மாவட்டங்கள் 32 என்ற அளவில் இருந்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கூடுதலாக 5 மாவட்டங்களை உருவாக்கியுள்ளார். இவரது ஆட்சி காலத்தில், நாகர்கோவில் உட்பட பல நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு, தென்காசி
கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட தொடங்கியுள்ளன. இதனால் மக்கள், நிர்வாக பணிகளுக்கு அதிக தூரம் அலைய வேண்டியது தவிர்க்கப்படுகிறது.
6வது மாவட்டம் மயிலாடுதுறை
இப்போது மயிலாடுதுறை இந்த வருடத்தின் 6வது புதிய மாவட்டமாக உதயமாகியுள்ளது. ஒரே வருடத்தில் இத்தனை அதிகமாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது சமீப காலத்தில் இதுதான் முதல் முறை என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.
மக்கள் கோரிக்கை
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க வேண்டும் என்பது கால்நூற்றாண்டு காலமாக மக்கள் முன்வைத்த கோரிக்கையாகும். அவர்கள் கோரிக்கையை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புதிய மாவட்டத்தை உருவாக்கியுள்ளார்.