கொடுங்கையூர் லாக் அப் டெத்! உடலில் 12 இடங்களில் காயம்! வெளியான மருத்துவ அறிக்கை! ஆனால் ஒரு ட்விஸ்ட்?
சென்னை : கொடுங்கையூர் லாக் அப் டெத் விவகாரத்தில் மரணமடைந்த ராஜசேகரின் மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், ராஜசேகரின் உடலில் 12 இடங்களில் காயம் இருந்தது எனவும், ஆனால்
காயம் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக உறுதியாகக் கூறமுடியாது என்று கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே உள்ள அலமாதி வேட்டைக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் அப்பு என்ற ராஜசேகர் மீது பல்வேறு திருட்டு, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டு உள்ளார்.
இவர் மீது சோழவரம், வியாசர்பாடி, கொடுங்கையூர், எம்.கே.பி. நகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
தமிழகத்தை உலுக்கிய கொடுங்கையூர் லாக்அப் மரணம் - களத்தில் இறங்கிய மாநில மனித உரிமை ஆணையம்
கொடுங்கையூர் லாக் அப் டெத்
இந்தநிலையில் கொடுங்கையூர் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு திருட்டு வழக்கில் விசாரணைக்காக ராஜசேகரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். நேற்று காலை அவரிடம் இருந்து திருட்டு நகையை பறிமுதல் செய்வதற்காக போலீசார் ராஜசேகரை வெளியே அழைத்து வந்தனர். அப்போது ராஜசேகர் திடீரென மயங்கி விழுந்தார்.
கைதி மரணம்
உடனடியாக அவரை போலீசார் கொடுங்கையூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜசேகர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் ராஜசேகரின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் உயிரிழந்தது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிர விசாரணை
ராஜசேகர் மரணம் தொடர்பாக 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், போலீசார் ராஜசேகரனை அடித்தே கொன்று விட்டதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையமும் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.
மருத்துவ அறிக்கை
இந்நிலையில் மரணமடைந்த ராஜசேகரின் மருத்துவ அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில் ராஜசேகரின் உடலில் 12 இடங்களில் காயம் இருந்தது எனவும், ஆனால் காயம் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக உறுதியாகக் கூறமுடியாது என்று கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து விரிவான அறிக்கை தயாராகி வருவதாகவும் அதற்குப் பிறகே முழுமையான காரணம் தெரியவரும் எனவும் கூறப்படுகிறது.