அடாது மழையிலும் விடாது நடந்த மெகா தடுப்பூசி முகாம் - ஆர்வத்துடன் ஊசி போட்ட 14,74,922 பேர்
தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற முகாம்களில் 14 லட்சத்து 74,922 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் கூறியுள்ளார்.
சென்னை: கனமழை வெள்ளத்திலும் தமிழகம் முழுவதும் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 14 லட்சத்து 74,922 பேருக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் கூறியுள்ளார். தமிழகத்தில் 72 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 33சதவிகிதம் பேர் 2வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல மாவட்டங்களில் வெள்ளம் மிதக்கிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 7 கட்டங்களாக தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. கடந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் 8வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நேற்றைய தினம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றது, அதன்படி திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குப்பம்மாசத்திரத்தில் நடைபெற்ற மருத்துவ முகாம் மற்றும் வீடு தேடி மருத்துவம் திட்டத்தை வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். அதன் பின் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெட்ஷீட், போர்வை, பால், ரொட்டி பொருட்களை அவர் வழங்கினார்.

இல்லம் தேடி மருத்துவம்
மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், "தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் கொரொனோ தடுப்பூசி சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது. கடந்த சிலநாட்களாக 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்ததால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் சுகாதார துறையினர் இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் அடிப்படையில் வீடுகளைத் தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

தடுப்பூசி அவசியம்
கொரோனாவுக்கு தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வு. தடுக்கி விழுந்தால் தடுப்பூசி மையம் என்ற நிலை இருப்பதால் மக்கள் தயக்கம் காட்டாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தற்போது தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்திருந்தாலும், உலக நாடுகள் முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
Recommended Video

உலக நாடுகளில் அதிகரிப்பு
அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் நாள்தோறும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இதனால் பெரும்பாலான உலக நாடுகள் பதற்றத்திலேயே இருக்கின்றன.

தடுப்பூசி செலுத்திய 14 லட்சம் பேர்
தமிழகத்தில் 72 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 33சதவிகிதம் பேர்2-வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற முகாம்களில் 14 லட்சத்து 74,922 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications