தமிழகத்தில் குரங்கு அம்மையா? பதட்டப்பட வேண்டிய அவசியமே இல்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை!
சென்னை : வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை நோய் ஏற்படவில்லை என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
குரங்கு அம்மை பரவியுள்ள நாடுகளில் இருந்து தமிழக விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்கா, லண்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருவதால், குரங்கு அம்மை பரவிய நாடுகளில் இருந்து சென்னை,திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கோவை விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று குவைத்,சார்ஜ்,டாக்கா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் அப்போது குரங்கு அம்மை பரவிய நாடுகளில் இருந்து வருபவரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.

குரங்கு அம்மை நோய்
ஆய்வு செய்தபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் ," பெல்ஜியம்,பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், நெதர்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட 30 நாடுகளில் குரங்கு அம்மை நோய் மக்களை அச்சுறுத்தி வருகிறது.550 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குரங்கு அம்மை குறித்த எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் கடந்த 15 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாதிப்பு இல்லை
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, பன்னாட்டு விமான நிலையங்களில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பும் கண்டறியப்படவில்லை. மே 20 முதல் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 630 விமானங்களில் வந்த 1,15,332 பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.இவர்களில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. கொரோனாவுக்கு பின் இந்திய விமான போக்குவரத்துத்துறை சார்பில் வெளிநாடுகளில் இருந்து வருவோர் தொடர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கொரோனா பரவல்
தமிழ்நாட்டில் குரங்கு அம்மை தாக்கம் இதுவரை இல்லையென்றாலும், வெளிநாடுகளில் இருந்து வருவோர் தொடர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் பரவிய கொரோனா தொற்று படிப்படியாக குறைந்துவருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நலமுடன் உள்ளனர் கொரோனா தொற்று இல்லாத கல்வி நிறுவனமாக ஐ.ஐ.டி., திகழ்கிறது.அண்ணா பல்கலைக்கழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23-ஆக உள்ளது.

கெட்டுப்போன இறைச்சி
வி.ஐ.டி.,கல்வி நிறுவனத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.யாரும் பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை. இப்போதெல்லாம் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் 5 அல்லது 6 நாட்களிலேயே குணமாகிவிடுகிறார்கள். கெட்டுப்போன இறைச்சி பயன்பாடை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நூற்றுக்கணக்கில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முகக்கவசம் அவசியம்
கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்பவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட உடன், மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும், முகக்கவசம் தொடர்ந்து அணிவது நல்லது மாணவர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்படும். கருமுட்டை விற்பனையை சட்டவிரோதமாக செய்தால் சம்மந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படு உரிமம் ரத்து செய்யப்படும் என இவ்வாறு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications