அம்மா இருசக்கர வாகன திட்டம்.. பெண்களிடம் போதிய வரவேற்பு இல்லை.. அமைச்சர் பெரியகருப்பன் பளீச்
சென்னை: அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மானிய விலை இருசக்கர வாகன திட்டத்திற்கு போதிய வரவேற்பு இல்லாததால் அத்திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவில்லை என்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே ஆர் .பெரியகருப்பன் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் காரணமாகக் கடந்த பிப்ரவரி மாதம் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்தது.
சட்டசபைத் தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

மானியக் கோரிக்கை விவாதம்
நிதித்துறை அமைச்சர் பிடிஆர் முதல்முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதேபோல தமிழ்நாட்டின் முதல் வேளாண் பட்ஜெட் ஆகஸ்ட் 14ஆம் தேதி தாக்கலானது. தொடர்ந்து தற்போது மானியக்கோரிக்கை மீதான விவாதம் சட்டசபையில் நடந்து வருகிறது. இன்று ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்துப் பேசினார்.

எஸ் பி வேலுமணி பேச்சு
சட்டசபையில் எஸ் பி வேலுமணி பேசுகையில், "பணிக்குச் செல்லும் பெண்களுக்கு உதவும் வகையில் மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்தனர். ஆனால், அந்த திட்டம் குறித்து பட்ஜெட்டில் எந்தவொரு தகவலும் இல்லை" எனத் தெரிவித்தார்.

இலவச பேருந்து பயணம்
அதற்குப் பதிலளித்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், "பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் அறிவிக்கப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் நாங்கள் தெரிவித்திருந்தோம். அதன்படி ஆட்சிக்கு வந்ததும் பெண்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கும் வகையிலான திட்டம் அறிவிக்கப்பட்டது. பெண்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டத்தால் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்" என்று கூறினார்.

வரவேற்பு இல்லை
மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மானிய விலை இருசக்கர வாகன திட்டத்திற்குப் பெரியளவில் வரவேற்பு இல்லை என்று அவர் தெரிவித்தார். மானிய விலை இருசக்கர வாகன திட்டத்திற்கு விண்ணப்பங்கள் எதுவும் வரவில்லை என்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே ஆர் .பெரியகருப்பன் சட்டசபையில் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications